பாஜக உத்தரவால் ராஜ்யசபாவை முடக்கிய அதிமுக.... குலாம்நபி ஆசாத் பாய்ச்சல்
டெல்லி: ப.சிதம்பரம் விவகாரத்தை முன்வைத்து ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் உத்தரவால்தான் ராஜ்யசபாவை அதிமுக எம்.பி.க்கள் முடக்கியதாக மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் சாடியுள்ளார். முன்னதாக ராஜ்யசபா துணைத் தலைவரான பிஜே குரியனும் அதிமுகவின் பொறுப்பற்று நடந்து கொள்வதாகவும் ஜனநாயகத்தை படுகொலை செய்வதாகவும் அதிமுக எம்.பி.க்களைப் பார்த்து சீறியிருந்தார்.
நாடாளுமன்றத்தில் சமீபகாலங்களாக தமிழக பிரச்சனைகளுக்காக மல்லுக்கட்டாத அதிமுக இன்று திடீரென ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக் கோரி தொடர்ச்சியான அமளியில் ஈடுபட்டது. இதனால் ஒட்டுமொத்தமாக நாடாளுமன்றத்தின் இருசபைகளுமே முடங்கிப் போனது.
மத்திய பாஜக அரசுடன் இணக்கமாக இருக்கக் கூடிய அதிமுக, திடீரென நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:
மத்திய அமைச்சர் மற்று தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் அவதூறு பேச்சுகளை பேசுவது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு அது இன்று விவாதிக்கப்பட இருந்தது. ஆனால் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தை விவாதிக்க விடாமல் அதிமுக எம்.பிக்கள் தொடர்ச்சியாக வேண்டுமென்றே அமளியில் ஈடுபட்டனர். இதற்கு முன்னர் அதிமுக எம்.பி.க்கள் இப்படி நடந்து கொண்டதே கிடையாது.
ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் உத்தரவின் பேரில்தான் அதிமுக எம்.பி.க்கள் திட்டமிட்டு இப்படி நடந்து கொண்டனர்.
இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.
ஜனநாயகப் படுகொலை
முன்னதாக ராஜ்யசபாவை நடத்திய துணைத் தலைவர் குரியன் (காங்கிரஸ்), அதிமுக எம்பிக்களின் நடவடிக்கை மிக மோசமானது; பொறுப்பற்ற செயல். சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம்தான் கோரிக்கை விடுக்க வேண்டுமே தவிர சபை நடவடிக்கைகளை முடக்குவது என்பது எப்படி சரியாகும்? இது ஜனநாயகப் படுகொலை என்றார்.