தான்சானியா நாட்டில் 1000 சிங்கங்களை கொன்ற வைரஸ் மீண்டும் பரவுகிறதா? கிர் காடுகளில் பலி தொடருகிறது
காந்திநகர்: குஜராத்தின் கிர் வனப்பகுதியில் கடந்த 18 நாட்களில் 21 சிங்கங்கள் பலியானதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குஜராத்தின் கிர் வனப்பகுதிகளில் 523 சிங்கங்கள் இருப்பதாக 2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்தது.
ஆனால் சமீப காலமாக அந்த வனப்பகுதியில் சிங்கங்கள் பலியாகும் எண்ணிக்கை என்பது திடீரென அதிகரித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை திடீரென பதினோரு சிங்கங்கள் பலியாகின. இந்த செய்தி வெளியான நிலையிலும், சிங்கங்களின் பலி எண்ணிக்கையை குறைக்க முடியவில்லை. செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை மேலும் 10 சிங்கங்கள் உயிரிழந்துள்ளன.
ஆக மொத்தம் 18 நாட்களில் 21 சிங்கங்கள் இறந்துள்ளது வனத்துறையினர் மற்றும் வனவியல் ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சிங்கங்கள் தங்களுக்குள், போட்டுக்கொள்ளும் சண்டையினாலும், கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய் தொற்று காரணமாகவும் பலியாகியுள்ளதாக வனத்துறை தரப்பிலும் கால்நடை மருத்துவர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சிங்கங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர் வனத்துறையினர்.
தான்சான்யா நாட்டில் 1994ம் ஆண்டு, நாய்கள் மூலமாக பரவிய ஒரு வைரஸ் 1000த்திற்கும் மேற்பட்ட சிங்கங்களை கொன்றது நினைவிருக்கலாம்.