ம.பி.: பலாத்காரம் செய்ய முயன்று மாணவியை எரித்துக் கொன்ற 3 மாணவர்கள்
இந்தூர்: மத்திய பிரதேசத்தில் வீட்டில் தனியாக இருந்த மாணவியை சக மாணவர்கள் 3 பேர் பலாத்காரம் செய்ய முயன்று தீ வைத்ததில் அவர் பலியானார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே உள்ள கர்காவ்ன் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் பார்மா படிப்பு படித்து வந்துள்ளார். அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர் படிக்கும் கல்லூரியில் படிக்கும் 3 மாணவர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர்.
வீட்டில் மாணவி தனியாக இருப்பதை அறிந்த அவர்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதை எதிர்த்து மாணவி போராடவே அவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
உடனே அந்த 3 பேரும் சேர்ந்து மாணவி மீது தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் 97 சதவீத தீக்காயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 3 மாணவர்களையும் கைது செய்தனர்.