கணவருக்காக கலந்து வைத்த விஷ டீயை குடித்த 4 வயது மகள் பலி, 12 வயது மகளின் உயிர் ஊசல்
அகர்தலா: திரிபுராவில் பெண் ஒருவர் தனது கணவரை கொலை செய்ய டீயில் விஷம் கலந்தார். ஆனால் அந்த டீயை தவறுதலாக எடுத்துக் குடித்த 4 வயது மகள் பலியானார்.
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோவிந்த சர்தார் பாரா பகுதி. அந்த பகுதியைச் சேர்ந்தவர் சீதா ராணி தெப்பர்மா. அவர் தனது இரண்டாவது கணவரான கௌதம் தெப்பர்மாவை கொலை செய்ய திட்டமிட்டார்.
இதையடுத்து அவர் டீயில் விஷம் கலந்து நேற்று கௌதமிற்கு அளித்துள்ளார். ஆனால் அந்த டீயை அவர் குடிக்கவில்லை. மாறாக விஷம் கலந்த டீயை சீதாவின் மகள்கள் மெர்ரி தெப்பர்மா(12) மற்றும் ஸ்ரியா தெப்பர்மா(4) ஆகியோர் குடித்தனர்.
டீயை குடித்த வேகத்தில் சிறுமிகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனே அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஸ்ரியா மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலியானார்.
மெர்ரி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சீதாவை கைது செய்துள்ளனர்.