15 நாள் டெங்கு சிகிச்சைக்குப்பின் இறந்த சிறுமி; மருத்துவக் கட்டணமோ ரூ. 16 லட்சம்
ஏழு வயது பெண் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சைக்காக டெல்லி புறநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார் . அவர் பிழைக்கவில்லை. ஆனால், அந்த மருத்துவமனை சிகிச்சைக்காக வாங்கிய தொகை ரூ.16 லட்சம்.
சமூக ஊடகத்தில் தீயாய் பரவிய இந்த செய்தி குறித்து விசாரிக்கும்படி இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு வாரகால சிகிச்சையின்போது 600-க்கும் மேற்பட்ட ஊசிகள் மற்றும் 1600 ஜோடி கையுறைகள் பயன்படுத்தியதாகக் கூறும் மருத்துவமனை அதற்கான கட்டணத்தையும் வசூலித்துள்ளது.
இது தொடர்பாக பெண்ணின் குடும்ப நண்பர் இட்ட டிவிட்டர் பதிவு ஒன்று 10,000க்கு மேற்பட்டவர்களால் பகிரப்பட்டுள்ளது.
- டெங்கு காய்ச்சலுக்கு ஏற்ற மருத்துவம் எது? மோதிக்கொள்ளும் இணைய பயன்பாட்டாளர்கள்
- மருத்துவம் கேட்ட மாணவிக்கு மரணத்தை பரிசளித்துள்ளார்கள்
குற்றச்சாட்டுக்கு உள்ளான குர்கானில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனை, விதித்த கட்டணங்களை நியாயப்படுத்தியுள்ளது.
20 பக்க அளவுக்கு நீளும் அந்தப் பெண்ணின் மருத்துவமனை பில் என்று சொல்லப்படும் ஆவணம் டிவிட்டரில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது. ரத்த சர்க்கரையை அளவிடும் அட்டை போன்ற எளிய மருத்துவ சாதனத்துக்குகூட அதிகமான கட்டணம் வசூலித்ததாக அந்த மருத்துவமனை மீது புகார் உள்ளது.
சமூக ஊடகத்தில் மக்கள் ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு எதிராக பதிவிட தொடங்கியதும், சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, தனது ட்விட்டர் கணக்கில்,"நாங்கள் உறுதியான நடவடிக்கை எடுப்போம்" என்று கூறியிருந்தார்.
ஆனால், ஃபோர்டிஸ் மருத்துவமனை தேவையான நடைமுறைகளைதான் பின்பற்றியதாகக் கூறியுள்ளது.
மேலும், அந்த மருத்துவமனை,"உலகளாவிய ஏற்றுக்கொள்ளப்பட்ட நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு நெறிமுறைகளின்படி தீவிர சிகிச்சைபிரிவில் உள்ள நோயாளிகளுக்கு பயன்படுத்தித் தூக்கி எறியும் கையுறை போன்ற சாதனங்கள் அதிக அளவில் தேவை," என்று குறிப்பிட்டுள்ளது.
செப்டம்பர் மாதமே இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த சிறுமியின் பெயர் அட்யா சிங். அவருக்கு டெங்கு இருப்பதாக ஆகஸ்ட் மாதம் கண்டறியப்பட்டது. அந்த சிறுமியின் நிலை மோசமான உடன், ஃபோர்டிஸ் நினைவு ஆய்வு மையத்தில் அந்த சிறுமி அனுமதிக்கப்பட்டார்.
அந்த குழந்தையின் தந்தை ஜயன்ட் சிங், உள்ளூர் ஊடகத்திடம்,"என் குழந்தையின் மூளை மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றார்கள்.அதே நேரம், அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எல்லாம் எடுக்கப்படவில்லை"
- வேர்க்கடலை ஒவ்வாமைக்கு நான்கு ஆண்டுகள் வரை பலன் தரும் மருத்துவம்..!
- நவீன வளர்ச்சியில் மனிதநேயம் மறக்கப்படுகிறதா? மக்களின் உணர்வுகள்
"அந்த சிறுமி அனுமதிக்கப்பட்ட போது, அவர் கடுமையான டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அது டெங்கு ஷாக் சிண்ட்ரோமாக வளர்ந்தது. நாங்கள் தொடர்ந்து சிறுமியின் மோசமான நிலை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தப்படியே இருந்தோம்." என்றுள்ளது மருத்துவமனை.
மருத்துவமனை மறுத்தாலும், எங்கள் குழந்தையை அழைத்துக் கொண்டு மருத்துவமனையிலிருந்து வெளியேற அனுமதி கேட்டோம் என்று ஒப்புக் கொள்கிறார் சிங். ஆனால் அவள் மருத்துவமனையிலேயே இறந்துவிட்டார் என்றும் அவர் கூறுகிறார்.
இந்த சம்பவம் குறித்து இட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், இறந்த எங்கள் மகளை வீட்டிற்கு எடுத்துச் செல்ல, ஆம்புலன்ஸ் கூட தர மறுத்தது அந்த மருத்துவமனை என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், "இதுமட்டுமல்ல, மருத்துவமனை என் மகள் அணிந்திருந்த மருத்துவமனை கவுனைத் திரும்பித் தரவேண்டும் என்றும் அதற்குத் தனியாக கட்டணம் செலுத்த வேண்டுமென்றும் கோரியது" என்றும் அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்