சிறுநீர் கழிக்க இரவில் வெளியே வந்த சிறுமியைக் கடத்தி பலாத்காரம்... 2 மாமாக்களுக்கு வலை
போபால்: மத்தியப் பிரதேசத்தில் இயற்கை உபாதையைக் கழிக்க இரவில் சென்ற 18 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து, அவர் மீது ஆசிட் வீசிய இருவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்திலுள்ள லஹ்ரோலி கிராமத்தைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட சிறுமி. கடந்த புதன்கிழமையன்று இரவில் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியில் வந்த இச்சிறுமியை அவரது மாமாக்கள் தாம்தா, முனீஷ் ராஜவத் ஆகிய இருவரும் கடத்திச் சென்று, அருகில் இருந்த வனப்பகுதியில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர், ஆசிட் மூலம் அச்சிறுமியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அச்சிறுமி அங்கேயே உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.
காலையில் கண் விழித்த அச்சிறுமியின் பெற்றோர் அவரைக் காணாமல் தேடியுள்ளனர். அப்போது வனப்பகுதியில் காயங்களுடன் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.