'கிஃப்ட்' தராத கடுப்பில் காதலனின் நிர்வாண படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பெண்
லக்னோ: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது ஆன்லைன் காதலனின் நிர்வாண புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வளர்ந்து வரும் தொழில் அதிபர் தேவேஷ் சர்மா. அவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் தனது 23 வயது சகாதரிக்கு சர்மாவின் நிறுவனத்தில் வேலை அளிக்குமாறு கேட்க அவரும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர்கள் சந்திக்காமலேயே நண்பர்கள் ஆகியுள்ளனர்.
அந்த பெண் தன்னை அழைத்துக் கொண்டு பார்ட்டிகளுக்கு செல்லுமாறு சர்மாவிடம் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள குட்டை பாவாடையும், ரூ.4,500 மதிப்புள்ள கைப்பையும் வாங்கித் தருமாறு அந்த பெண் சர்மாவிடம் கேட்டுள்ளார். ஆனால் அவற்றை வாங்கிக் கொடுக்க சர்மா மறுத்துவிட்டார். மேலும் பேசியபடி லக்னோ அருகில் உள்ள ஆலம்பாக்கில் இருக்கும் ஷாப்பிங் மாலுக்கும் வர சர்மா மறுத்துவிட்டார்.
மேலும் அந்த பெண் தனக்கு ரூ.2 லட்சம் அளிக்குமாறு சர்மாவுக்கு போன் செய்து கேட்டுள்ளார். அவர் மறுக்கவே தனக்கு ரூ.20 ஆயிரம் அளிக்குமாறு கூறி தனது வங்கி கணக்கு எண்ணையும் அளித்துள்ளார். அதற்கு சர்மா மறுக்க அந்த பெண் அவரை மிரட்டியுள்ளார்.
சர்மா பணமோ, பரிசுப் பொருட்களோ தர மறுத்ததால் கடுப்பான அந்த பெண் சர்மா பெயரில் ஃபேஸ்புக்கில் போலி கணக்கு துவங்கி அவரின் போலி நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் ஆபாசபட இணையதளங்களில் அந்த போலி ஃபேஸ்புக் கணக்கின் இணைப்பை அளித்ததுடன், சர்மாவின் செல்போன் எண்ணை வெளியிட்டு அவர் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிந்ததும் சர்மா அந்த பெண் மீது போலீசில் புகார் கொடுத்தார். சர்மாவும் அந்த பெண்ணும் இணையதளம் மற்றும் செல்போன் மூலம் மட்டும் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்துள்ளனர். அவரது புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார் அந்த பெண் மானக்நகரைச் சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த பெண் செல்போன் மூலம் சர்மாவிடம் மன்னிப்பு கேட்டார்.