அப்பா ஒழுங்கா கார் ஓட்டியிருந்தா குழந்தை இறந்திருக்காது.. மனிதாபிமானம் தொலைத்த ஹேமமாலினி
மும்பை: தனது காருடன் மோதி விபத்துக்குள்ளாகி ஒரு குழந்தையை பறிகொடுத்த நபர், ஒழுங்காக கார் ஓட்டி வந்திருந்தால், அந்த விபத்தே நடந்திருக்காது என்று தனது வாய் மலர்ந்துள்ளார் நடிகையும், எம்.பியுமான ஹேமமாலினி.
ஹிந்தி நடிகை ஹேமமாலினி கடந்த வாரம் தனது மெர்சிடஸ் சொகுசு, காரில் உத்தபிரதேச மாநிலம் மதுராவிலிருந்து, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு சென்று கொண்டிருந்தார். தவுசா நகர் என்கிற இடத்தில் ஹேமமாலினியின் கார் வேகமாக சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஆல்டோ காருடன் மோதியது.
ஹேமமாலினிக்கு சிகிச்சை
இந்த விபத்தில் ஹேமமாலினி தலையில் படுகாயம் அடைந்து ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். ஆல்டோ காரில் வந்தவர்களில் சோனம் (4) என்ற குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அந்த காரில் வந்த மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனிடையே, ஹேமமாலினி காரை ஓட்டி வந்த ஓட்டுநர் ரமேஷ்சந்த் தாகூர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வேகமாக வாகனத்தை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதாக 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியான குடும்பம்
ஹேமமாலினியின் கார் ஓட்டுனர் ஏற்படுத்திய விபத்தில் பாதிக்கப்பட்டது, ஜெய்பூரை சேர்ந்த ஹனுமன் மஹாஜனின் குடும்பம் தான். இந்த விபத்தை பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்று அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், "எங்கள் குடும்பம் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன்தான் இருக்கும.விபத்து நடந்த அன்றும் அப்படி தான் சென்றுக் கொண்டிருந்தோம். காரில் என் ஆறு வயது மகன் சோமில், நான்கு வயது மகள் சோனம், மனைவி ஷிகா,எங்கள் உறவினர் சீமா அவர்களுடன் சென்றுக் கொண்டிருந்தோம்.
ஹேமமாலினிக்கே முன்னுரிமை
ஜெய்பூரில் இருந்து லால்சோத் மெதுவாக சென்று கொண்டிருந்த எங்கள் ஆல்டோ கார் மீது ஹேமமாலினியின் கார் அதிவேகமாக மோதியது. சிறிது நேரம் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. நாங்கள் அனைவருக்கும் படுகாயமடைந்திருந்த நிலையில்,விரைந்து வந்த ஆம்புலன்ஸ் நடிகை ஹேமாமாலினியை மீட்பதில் தான் கவனம் செலுத்தினர். என் மகளையும் அவருடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் அவள் பிழைத்திருப்பாள்" என கூறியிருந்தார்.
விஐபி கலாசாரம் ஒழிக
இதனிடையே, மீடியாக்களும், சோஷியல் மீடியா பயனாளிகளும், ஹேமமாலினிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டதையும், சிறுமி மற்றும் அவரின் குடும்பத்தை கண்டுகொள்ளாமல் விட்டதையும் கூறி, விஐபி கலாச்சாரம் இந்த நாட்டை விட்டு ஒழிய வேண்டும், நடிகர், நடிகைகளை ஏதோ தெய்வம்போல பார்க்கும் மனநிலை ஒழிந்து சமத்துவ சமுதாயம் மலர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
|
ஹேமமாலினி கடுப்பு
இதனால், ஹேமமாலினி கடுமையாக கோபம் அடைந்துள்ளார். இதை தனது டிவிட்டர் மூலம் தெரிவித்து வருகிறார். நேற்று வெளியிட்ட டிவிட்டுகளில், மீடியாக்களையும், பொதுமக்களையும் திட்டி தீர்த்தார். செய்தி பசிக்காக மீடியாக்களும், பொதுமக்களில் சிலரும் என்னை அசிங்கப்படுத்துகின்றனர். நானே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தேன். அப்போது நான் எப்படி உதவி செய்ய முடியும் என்று கேட்டிருந்தார்.
|
தந்தை மீதுதான் தப்பு
இந்நிலையில், இன்று இன்னும் ஒருபடி மேலேறி, விபத்தில் உயிரிழந்த சிறுமியின் தந்தைதான் பொறுப்பில்லாமல் கார் ஓட்டி வந்ததாக மறைமுகமாக ஹேமமாலினி கூறியுள்ளார். இதுகுறித்த அவரது டிவிட்டுகளை பாருங்கள். "தேவையில்லாமல் உயிரிழந்த சிறுமி மற்றும் காயமடைந்த அவரது குடும்பத்தாருக்கு எனது மனது இறங்குகிறது. சிறுமியின் தந்தை, டிராபிக் ரூல்சை மதித்து வாகனம் ஓட்டியிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி செய்திருந்தால், இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். ஒரு உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்" என்று ஹேமமாலினி கூறியுள்ளார்.
|
இது நியாயமா?
விபத்திற்கு காரணமான ஹேமமாலினி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்தில் இளம் பிஞ்சை பறிகொடுத்த தந்தை மீது ஹேமமாலினி பழிபோட்டு, வழக்கை திசைதிருப்ப முயலுவது விஐபி கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. தவறு யார் மீது என்பதை காவல்துறை கண்டுபிடிக்கட்டும். முதலில், மிகப்பெரிய பாதிப்பை உணர்ந்துள்ள ஒரு குடும்பத்துக்கு எதிராக இப்படி உளறிக்கொட்டுவதை ஹேமமாலினி நிறுத்துவாரா என்பதே சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.