காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை தீவைத்து எரித்த வாலிபர்
ஹைதராபாத்: ஆந்திராவில் தனது காதலை ஏற்காமல் வேறு ஒருவரை திருமணம் செய்யவிருந்த 18ம் வயது பெண்ணின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிதாபுரம் நகரில் இருக்கும் வேணுமாதா சுவாமி கோவில் தெருவில் வசித்து வருபவர் ரேவதி(18). அவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த பெயிண்ட்டர் நவீன்(24) தனது காதலை தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் காதலை ரேவதி ஏற்கவில்லை. இதையடுத்து அவர் ரேவதிக்கு சில காலமாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் ரேவதிக்கு திருமணம் நிச்சயமானது. இது குறித்து அறிந்த நவீன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரை மிரட்டியுள்ளார். இதையடுத்து நேற்று ரேவதியின் வீட்டுக்குள் நுழைந்த நவீன் அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த ரேவதி காக்கினாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ள ரேவதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நவீனை தேடி வருகின்றனர்.