பெங்களூரில் நடுரோட்டில் கல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயன்ற மாணவர்கள்!
பெங்களூர்: நடுரோட்டில், கல்லூரி மாணவியின் டி-சர்ட்டை பிடித்து இழுத்து அநாகரீகமாக கேலி, கிண்டல் செய்த கல்லூரி மாணவர்களை பொதுமக்கள் உதவியுடன் டிராபிக் போலீசார் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பெங்களூர், கோரமங்களாவிலுள்ள பேயிங் ஹாஸ்டல் ஒன்றில், தங்கியிருந்தபடி கல்லூரியில் படித்து வருகிறார்கள் ஜேஸ்மின் மற்றும், ஸ்டெல்லா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). நேற்று ஸ்டெல்லாவுக்கு பிறந்த நாள். இதையொட்டி முந்தைய நாள் இரவு, அசோக் நகர் பகுதியிலுள்ள கருடா மாலுக்கு ஷாப்பிங் செய்வதற்காக ஜேஸ்மினுடன், ஸ்டெல்லா சென்றார்.
ஷாப்பிங்கை முடித்துவிட்டு ஆடுகோடி வழியாக கோரமங்களா செல்லும் சாலையில் ஸ்கூட்டியில் இருவரும் சென்றனர். பால்ட்வின் பள்ளி அருகே டிராபிக் நெரிசலால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. அப்போது பக்கத்து ஆட்டோவில் பயணித்த 4 இளைஞர்கள், இந்த இரு இளம் பெண்களை பார்த்து ஆபாசமாக கமெண்ட் செய்துள்ளனர்.
கோபமடைந்த ஸ்டெல்லா, பைக்கை, ஆட்டோவின் குறுக்கே நிறுத்தி வாலிபர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். கோபமடைந்த வாலிபர்கள், நடுரோடு என்றும் பாராமல், ஸ்டெல்லாவின் டி-சர்ட்டை பிடித்து இழுத்தும், தள்ளியும் டீசிங் செய்துள்ளனர்.
இதைப்பார்த்த பாதசாரிகளில் ஒரு பெண்ணும், ஆணும், உதவிக்கு ஓடிவந்துள்ளனர். அவர்களையும் வாலிபர்கள் அடித்து விரட்டினர். இதைப்பார்த்து கோபமடைந்த மேலும் சில பாதசாரிகள், அப்பகுதியிலிருந்த டிராபிக் போலீசார் உதவியுடன் அந்த வாலிபர்களை சூழ்ந்து வளைத்துப் பிடித்தனர். 2 வாலிபர்கள் மட்டும் சிக்கினர். அவர்கள் அசோக்நகர் காவல் நிலையத்தில், 2 பேரையும் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர்கள் ரோஷன் கைஃபாலி (21) மற்றும் ஜான் (19) என்பது தெரியவந்தது. கேரளாவை சேர்ந்த இருவரும், பிஜி ஒன்றில் தங்கியிருந்து பட்டப்படிப்பு படித்து வந்தனர். இவர்கள் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.