1000 பெண்கள் டேக் செல்ஃபி புள்ள...
ஜெய்ப்பூர்: பெண்களுக்கான அதிகாரத்தை வலியுறுத்தும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி ‘செல்ஃபி' எனப்படும் சுயப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி ராஜஸ்தானில் நடைபெற்றது.
கடந்த 30 ஆண்டுகளில் ஒருகோடியே 20 ஆயிரம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதுமட்டுமல்லாது, பெண் சிசு கொலை, முறையான சிகிச்சையின்றி நோய் காரணமாக உயிரிழத்தல் உள்ளிட்ட காரணங்களால் பெண்களின் விகிதாச்சாரம் குறைந்து வருகிறது.
1961 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1000 ஆண்களுக்கு 976 பெண்கள் இருந்தனர். ஆனால், 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, அந்த எண்ணிக்கை 919 ஆக குறைந்தது.
இந்நிலையில், பெண்களின் அதிகாரம், பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குதல் உள்ளிட்டவைகளை மைய கருத்தாக கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், சுமார் 1118 பெண்கள் ஒன்று கூடி செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
இந்த பிரமாண்ட சுய படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி கின்னஸ் சாதனை முயற்சியாகவும் பதிவு செய்யப்பட்டது.