தூத்துக்குடியில் யு.எஸ். கப்பல்.. மத்திய அரசிடம் விளக்கம் கோருகிறது பாஜக
டெல்லி: தூத்துக்குடி கடற்பரப்பில் அமெரிக்க ஆயுத கப்பல் பிடிபட்டது குறித்து அமெரிக்க ஆயுத கப்பல் பிடிபட்டது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் பாரதிய ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
தூத்துக்குடி அருகே கடந்த வெள்ளிக்கிழமை இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த சீ மேன் கார்டு என்று அமெரிக்க கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் மடக்கி பிடித்து உள்ளனர்.
பல கேள்விகள்
ஆயுதங்களுடன் வந்த அமெரிக்க கப்பல் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
கப்பலில் பல நாட்டவர்களுடன் இந்தியர்..
அந்த கப்பலின் சட்ட ரீதியான அங்கீகாரம் பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை. அதில் இங்கிலாந்து, எஸ்டோனியா, உக்ரைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் இந்தியர்களும் இருக்கிறார்கள்.
அனுமதி இருக்கிறதா?
அந்த கப்பலுக்கு முறையான உரிமம் உள்ளதா? இந்திய எல்லைக்குள் நுழைய அனுமதி பெற்றுள்ளதா? என்பது பற்றியும் தெளிவாக தெரியவில்லை.
கொச்சிக்கு எப்ப போனது?
அந்த கப்பல் எப்போது கொச்சி துறைமுகத்துக்கு வந்தது என்பது பற்றியும் தெரியவில்லை.
எப்படி கையாள்வது என்பது தெரியுமா?
தனியார் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமானது என்று கூறப்படும் அந்த கப்பல் ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் வந்து உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளை எப்படி கையாளுவது என்பதற்கான செயல் திட்டம் மத்திய அரசிடம் இருக்கிறதா?
எங்கள் கேள்விகளுக்கு என்ன பதில்?
கொச்சியில் முறைப்படியான சோதனை நடத்தப்பட்ட பின்னர் தான் அந்த கப்பல் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டதா? கப்பல் அடுத்து போய்ச் சேரவேண்டிய இடம் எது? ஏன் அங்கு போய்ச் சேரவில்லை? அவர்கள் தூத்துக்குடியில் எரிபொருள் வாங்க வேண்டிய அவசியம் என்ன? ஆகிய கேள்விகளுக்கு விடை அவசியம்.
மத்திய அரசு விளக்க வேண்டும்..
தமிழகத்தில் விசாரணை நடத்தப்பட்டாலும் இது குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.