ரூ.10 கோடி மானநஷ்ட ஈடு கொடுங்கள்.. அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக மலையாளிகள் வழக்கு
கேரளா வெள்ளத்தின் போது மலையாளிகளை அவமானப்படுத்தியதாக செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளா வெள்ளத்தின் போது மலையாளிகளை அவமானப்படுத்தியதாக செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் 10 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
அங்கு வெள்ளத்தால் 483 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் பிரபல செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
என்ன மாதிரி பேசினார்
கேரளா வெள்ளம் குறித்த விவாதத்தில், பேசிய போது, வடஇந்திய செய்தியாளாரும், ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமி மலையாளிகளுக்கு எதிராக கடுமையாக பேசினார். அதில் ''இந்தியாவில் மலையாளிகளை போல மோசமான நபர்களை பார்த்தது இல்லை. உலகிலேயே மிகவும் மோசமான குணம் கொண்டவர்கள் அவர்கள். இந்தியாவிற்கு எதிராக பேசுவதுதான் அவர்களின் பணி. அவர்கள் இதற்காக அனுபவிக்கிறார்கள்'' என்று கொஞ்சம் கூட மனித தன்மை இல்லாமல் பேசி இருந்தார்.
கொந்தளிப்பு
ஏற்கனவே பல முறை அவர் மலையாளிகளுக்கு எதிராக இப்படி பேசியுள்ளார். இந்த நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து அவர் இப்படி பேசியது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கேரளா மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
தற்போது, கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பி. சசி, அர்னாப் கோஸ்வாமி அவரது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளார் .தொலைக்காட்சியில் மோசமாக பேசிய அவர், தொலைக்காட்சியிலேயே இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுபோன்ற செயல்களில் இனியும் ஈடுபட மாட்டேன் என்று நீதிமன்றத்தில் அவர் உறுதியளிக்க வேண்டும் என்றுள்ளார்.
வழக்கு தொடுக்கப்படும்
மேலும், கேரளா மக்களை அவமானப்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளார். இந்த பணத்தை கொடுக்கவில்லை என்றால், தொடர்ந்து அர்னாப் கோஸ்வாமி பல வழக்குகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.