உத்தரகண்ட் வெள்ளம்... தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்... உள் துறை அமித்ஷா உறுதி
சாமோலி: திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உள் துறை அமித்ஷா ட்வீட் செய்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை சரிந்து விழுந்ததால், திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த வெள்ளப்பெருக்கில் 100 முதல் 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அம்மாநிலத் தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ராணுவம், இந்தோ - திபெத்தியன் எல்லை போலீசாருடன் அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உள் துறை அமித்ஷா ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக அமித் ஷா தனது ட்விட்டரில், "உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் குறித்து மாநில முதல்வர் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், இந்தோ - திபெத்தியன் எல்லை போலீஸ் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியோருடன் ஆலோசனை நடத்தினேன்.
அனைத்து அதிகாரிகளும், வெள்ளத்திலிருந்து மக்களைக் காப்பாற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் அனுப்பப்பட்டுள்ளனர். உத்தரகாண்டிற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.