பாஜகவுக்கு "ஜிகர்தண்டா தூத்" கொடுத்த திரிணமூல் காங்கிரஸ்.. கொல்கத்தாவை மிரட்டிய "கோ பேக் அமித்ஷா"!
கொல்கத்தாவில் அமித்ஷாவுக்கு எதிராக பேனர்கள் வைக்கப்பட்டன.
கொல்கத்தா: வடிவேலு பாணியில் சொல்வதானால், "இத ஒன்னு கத்து வெச்சிக்கிட்டு ஓயாம தொல்லை பண்றது" என்பது மாதிரி... ஒரு வாசகம் நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. ட்விட்டரிலும் ட்ரெண்டாகி வருகிறது. ஹேஷ்டேக்கிலும் முதலிடத்தில் வந்துள்ளது. அது கோ-பேக்-அமித்ஷா என்பதுதான்.
தமிழ்நாட்டுக்கு வந்த அமித்ஷாவும், மோடியும் இந்த வார்த்தைகளை எளிதில் மறந்திருக்க முடியாது. இப்போது மேற்கு வங்கத்திலும் ஒலிக்க தொடங்கியுள்ளது. இன்று ஒரு பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது.
வரவேற்பு ஏற்பாடுகள்
அதில் கலந்து கொள்ள அமித்ஷா வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக ஊரெல்லாம் அவரை வரவேற்க பேனர்கள் நேற்றிரவு மின்விளக்கில் பளிச் பளிச் என மின்னின. அமித்ஷா உருவம் பொறித்த பல்வேறு தோரணங்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் பறந்தன. ஆளுயர கட் அவுட்களும் வைக்கப்பட்டு பயங்கரமான வரவேற்பு ஏற்பாடு நடைபெற்று வந்தது.
பலத்தை காட்ட முனைப்பு
இவ்வளவு செய்ய காரணம், எப்படியாவது மேற்கு வங்காளத்தில் தங்கள் கட்சியின் பலத்தை காட்டிவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான். அதற்காக பல டிசைன்களில் பல பேரணிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் போராட்டங்களை போராடி நடத்தி வருகிறது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் 50 சதவிகித இடங்களையாவது வெற்றி பெற வேண்டும் என்று பாஜக தரப்பு குறிப்பாக அமித்ஷாதான் துடித்து வருகிறார். அதற்குத்தான் இவ்வளவு ஏற்பாடும்.
கோ-பேக்-அமித்ஷா
ஆனால் இந்த தடபுடல்களிடையே வேறு பல பேனர்களும் வைக்கப்பட்டதுதான் பாஜகவினருக்கு கடுப்பேற்றிவிட்டது. ''கோ பேக் அமித்ஷா'' என்பதுதான் அந்த பேனர். இதை தவிர ''ஆன்ட்டி பெங்கால் பிஜேபி கோ பேக்'' போன்ற பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.
எதிரான கட்அவுட்கள்
இந்த பேனர்கள் எல்லாம் அமித்ஷாவின் வரவேற்பு பேனர்களின் நடுநடுவே வைக்கப்பட்டுவிட்டதால் எளிதில் யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. அமித்ஷாவுக்கு எதிராக இந்த பேனர்களை வைத்தது சாட்சாத் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள்தான். எப்படியோ பதட்டம், பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை. ஜிகர்தண்டா தூத் குடித்த நிலைக்கு பாஜகவினர் போய் விட்டனர்!