நடிகை பலாத்கார வழக்கில் மத்திய அமைச்சர் கவுடா மகன் சமரச மையத்தை அணுகலாம்: கோர்ட் அறிவுரை
நடிகை பலாத்கார விவகாரம் தொடர்பாக இணக்கமான தீர்வு காண சமரச மையத்தை அணுகுமாறு கார்திக் கவுடாவிற்கு பெங்களூர் நீதிமன்றம் இன்று அறிவுறுத்தியுள்ளது.
பெங்களூர்: பாலியல் பலாத்கார வழக்கில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா சமரச மையத்தை அணுகி தீர்வு காணுமாறு பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னட நடிகை மைத்ரியா கவுடா மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் தன்னை ரகசிய திருமணம் செய்து வேறு பெண்ணை மணக்க உள்ளார் என்று கூறி பெங்களூர் ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் அவர் மீது பாலியல் பலாத்காரம், ஏமாற்றம், கடத்தல் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் கார்த்திக் மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் போலீசார், நீதிமன்றத்தில் கார்த்திக் கவுடா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கார்த்திக் கவுடா மற்றும் நடிகை மைத்ரியா தரப்பு இணக்கமான தீர்வு காண சமரச மையத்தை அணுகுமாறு பெங்களூர் நீதிமன்றம் இன்று அறிவுறுத்தியுள்ளது. இதற்கு போதிய கால அவகாசம் வழங்குமாறு கார்த்திக் கவுடாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டார். இதையடுத்து இந்த வழக்கை நவம்பர் 30-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவுக்கும் குஷால்நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் நானய்யாவின் மகள் ராஜ்ஸ்ரீ என்கிற ஸ்வாதிக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. இதனிடையே கார்த்திக் கவுடா தன்னை காதலித்து ரகசிய திருமணம் செய்து வேறு பெண்ணை மணக்க உள்ளதாக கூறி நடிகை மைத்ரி கவுடா ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.