எங்களுக்கு வரும் வாக்குகளை ஏன் பிரிக்கிறீங்க? திரிணாமுல், ஆம் ஆத்மி மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்
பனாஜி: கோவா சட்டசபை தேர்தலில் பாஜக அல்லாத வாக்குகளை திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் பிரித்துவிடும் என்று அம்மாநிலத்துக்கான காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
40 இடங்களைக் கொண்ட கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 14-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
'முஸ்லிம்களுக்கு பிறகு, இந்துத்துவா படைகளின் இலக்கு கிறிஸ்தவர்கள்'.. மத்திய அரசை தாக்கிய ப.சிதம்பரம்
கருத்து கணிப்புகள்
கோவாவில் பாஜக ஆட்சியில் உள்ளது. கோவா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள், பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றே கூறி வருகின்றன. காங்கிரஸ் கட்சிக்கு சிங்கிள் டிஜிட் இடங்கள்தான் கிடைக்கும் என்றும் இக்கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமரும் அளவுக்கு இடங்களைக் கைப்பற்றும் என்கின்றன சில கருத்து கணிப்புகள்.
மெகா கூட்டணி உருவாகுமா?
மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ், கோவாவில் களம் காண்கிறது. ஆனால் கோவா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மிகப் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இன்னொரு பக்கம், மகாராஷ்டிரா போல பாஜக அல்லாத கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன.
திரிணாமுல், ஆம் ஆத்மி மீது சாடல்
இந்த நிலையில் கோவா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் ப. சிதம்பரம் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளை விமர்சித்துள்ளார். ப. சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவு: கோவாவில் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான் போட்டி. கோவா தேர்தலில் பாஜக அல்லாத வாக்குகளை திரிணாமுல் காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் பிரிக்கும் என்பது என் கணிப்பு. இதனை அரவிந்த் கெஜ்ரிவால் உறுதிப்படுத்தி உள்ளார்.
காங்-க்கு வாக்களிக்க அப்பீல்
கோவாவில் 10 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு கட்டி மாற்றம் வேண்டும் என விரும்புகின்றனர். அப்படி மாற்றத்தை விரும்புகிறவர்கள் காங்கிரஸுக்குதான் வாக்களிப்பர். ஆட்சி தொடர வேண்டும் என விரும்புகிறவர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பர். கோவாவில் ஆட்சி மாற்றம் தேவையா? இல்லையா? என்கிற கேள்வி வாக்காளர்கள் முன்னர் தெளிவாக வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஆட்சி மாற்றத்துக்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.