கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு உடல்நலக் குறைவு.. மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
பனாஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு வந்தவர் பாரிக்கர். இதற்காக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
மூக்கில் உணவுக் குழாயுடனே அரசு நிர்வாகத்தை கவனித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கோவாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை சீராக உள்ளது. அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதால் அச்சப்பட தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் இருநாட்களுக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
பாரிக்கர் உடல் மோசமடைந்து வருவதாக எழுந்துள்ள வதந்திகளை நம்ப வேண்டாம் என மூத்த அமைச்சர் விஜய் சர்தேசாய் தெரிவித்தார். கோவா மாநில சுகாதாரத்துறை மந்திரி விஸ்வஜித் ரானே, நேற்று மருத்துவமனை சென்று மனோகர் பாரிக்கரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.