கோவா முதல்வர் மனோகர் பரிக்கருக்கு அமெரிக்காவில் சிகிச்சை
கோவா முதல்வர் மனோகர் பரிக்கரை மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவா : கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேல்சிகிச்சைக்காக அவரை அமெரிக்கா அழைத்துச்செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. தற்போது மனோகர் பரிக்கர் முதல்வராக உள்ளார். சமீபத்தில் இவர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்குப் பிறகு வீடுதிரும்பிய அவருக்கு, மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த 15ம் தேதி மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.
இதை கோவா மாநில சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லாபோ மறுத்துள்ளார். மேலும், மனோகர் பரிக்கருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதால், உடல்நலம் தேறி வருவதாக அவர் தெரிவித்தார்.
தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தேவைப்பட்டால் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்வது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்து முடிவெடுத்துள்ளோம் என்றும் மைக்கேல் லாபோ தெரிவித்தார்.
முதல்வர் பரிக்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், நாளை மறுதினம் தாக்கல் செய்யப்படவுள்ள கோவா மாநில பட்ஜெட்டை அம்மாநில அமைச்சர் சுதின் தவாலிகர் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.