கர்நாடகா ஆளுநர் முடிவால் கோவா பாஜக அரசுக்கு நெருக்கடி- ஆட்சி அமைக்க உரிமை கோரி காங். போராட்டம்!
கோவாவில் தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்கிறது காங்கிரஸ்.
Recommended Video
பனாஜி: கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததால் கோவாவில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோவாவில் தனிப்பெரும் கட்சியாக வென்ற காங்கிரஸை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி அக்கட்சி எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கோவாவில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களிலும் பாஜக 13 தொகுதிகளிலும் வென்றது. தனிப்பெரும் கட்சியான காங்கிரஸை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் அழைக்கவில்லை.
பாஜகவும் சிறிய கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத்து அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்தன. கோவா ஆளுநரின் இம்முடிவு மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
பெரும்பான்மை இல்லை
இந்த நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக 104 இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் 78, ஜேடிஎஸ் 37 இடங்களில் வென்றன. பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை.
தனிப்பெரும் கட்சி அடிப்படையில் முடிவு
தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் காங்கிரஸும் ஜேடிஎஸ்-ம் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரின. பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களை இந்த கூட்டணி பெற்றிருக்கிறது. ஆனால் கர்நாடகா ஆளுநர் வாஜூபாய் இதை நிராகரித்துவிட்டு தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார்.
ஆளுநர் முடிவால் சர்ச்சை
புதிய முதல்வராக பாஜகவின் எடியூரப்பா இன்று பதவியேற்றார். கர்நாடகா ஆளுநர் முடிவும் கடும் விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கிறது.
காங்கிரஸ் போர்க்கொடி
அத்துடன் கோவாவில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு இடியாப்ப சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியான பாஜகவுக்கு ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததைப் போல கோவாவில் தனிப்பெரும் கட்சியான எங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளது காங்கிரஸ்.
கோவா காங். பேரணி
மேலும் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மாளிகை நோக்கி நாளை பேரணி நடத்த உள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.