கோவா அரசியலில் திடீர் திருப்பம்.. பறி போகிறதா பாஜக ஆட்சி? ஆட்சிக்கு உரிமை கோரியது காங்கிரஸ்
பானாஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு, உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழுத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான பாபு கவ்லேகர் தனது கட்சியின் 16 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை ஆளுநரின் செயலாளரிடம் இன்று வழங்கினார்.
ஆளுநர் கோவாவில் இல்லாததால் செயலாளரிடம் மனு வழங்கப்பட்டது.
பேட்டி
பின்னர் நிருபர்களிடம் பேசிய பாபு கவ்லேகர், கோவா ஆளுநர் செவ்வாய்க்கிழமை மாநிலம் திரும்பியதும், அவரை அனைத்து எம்எல்ஏக்களும் நேரில் சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம். மனோகர் பாரிக்கர் தனது பதவியை விட்டு விலக மறுத்து ஒரு அசாதாரண சூழ்நிலையை கோவாவில் உருவாக்கி உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எம்எல்ஏ குற்றச்சாட்டு
காங்கிரஸ், எம்.எல்.ஏ லூயிசின்கோ பலேரியோ கூறுகையில், ஆட்சியில் உரிமை கோர காங்கிரஸ் கட்சிக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. நாங்கள் தான் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றோம். இப்போதும் தனிப்பெரும் கட்சியாக நாங்கள்தான் உள்ளோம். ஆனால் மக்கள் எங்களுக்காக, தந்த தீர்ப்பை பாஜக திருடிக் கொண்டது. மக்களின் தீர்ப்பை ஆளுநரின் துணை கொண்டு வீழ்த்தி விட்டனர். இந்த அரசு செயல்படவில்லை. கோவாவில் அரசு என்ற ஒன்றே கிடையாது. ஆளுநரும் மாநிலத்தில் கிடையாது, அமைச்சர்களும் இங்கு கிடையாது. மொத்தத்தில் பெரும் வெற்றிடம் நிலவுகிறது. இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார்.
|
கூட்டணி அரசு
கோவா மாநில சட்டசபையில் காங்கிரஸின் பலம் 16ஆக உள்ளது. பாஜக 14 தொகுதிகளை வென்றிருந்தது. ஆனால், தனிப்பெரும் கட்சியான காங்கிரசை ஆட்சியமைக்க அழைப்புவிடுக்காத ஆளுநர் பாஜகவை அழைத்தார். கோவா வளர்ச்சி கட்சி மற்றும் எம்ஜிபி, ஆகிய தலா மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்த பாபஜக ஆட்சியைப் பிடித்துக் கொண்டது. சுயேட்சை மற்றும் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு எம்எல்ஏவும் பாஜக ஆட்சிக்கு ஆதரவு அளித்தார்.
|
மனோகர் பாரிக்கர் உடல்நலம்
இந்த நிலையில், மனோகர் பாரிக்கர் கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அமெரிக்கா சென்று தங்கியிருந்து, சிகிச்சை பெற்று திரும்பிய பிறகும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். எனவே, பாஜகவிற்கு ஆதரவு அளித்த கட்சியினர் தங்களுக்கு ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கருதுகிறது.