கோவாவில் நடந்தது என்ன... கோவா காங்கிரஸ் பொறுப்பாளர் செல்வக்குமார் எம்பி ஷாக் பேட்டி
பனாஜி: கோடிக்கணக்கான பணம் கொடுத்து கோவா மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக தங்கள் பக்கம் இழுத்து இருப்பதாக கோவா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக உள்ள செல்வக்குமார் எம்பி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவைத் தொடர்ந்து கோவாவிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10பேர் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். 15 எம்எல்ஏக்கள் வைத்திருந்த காங்கிரஸ் கட்சிக்கு இப்போது அங்கு வெறும் 5எம்எல்ஏக்கள் உள்ளனர். அதேநேரம் கூட்டணி அமைத்து ஆளும் பாஜகவுக்கு இதுவரை 13 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில் இப்போது 10 பேர் இணைந்ததால் 23 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் மேலிடம் கோவா நிலவரம் குறித்து ஆராய அகில இந்திய காங்கிரஸ கமிட்டி செயலாளரும், கோவா காங்கிரஸ் பொறுப்பாளருமான செல்வக்குமார் எம்பியை நேற்று முன்தினம்இரவு கோவா அனுப்பியது. அவர் மீதமுள்ள 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கோவா சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் குறித்து 5 எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தப்படும். கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து பாஜக எங்கள் எம்எல்ஏக்களை இழுத்துள்ளது. மாநிலத்தின் நலனை சமரசம் செய்து எங்கள் எமஎல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.
கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பாஜக இதே வேலையைத்தான் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் செய்து வருகிறார்கள். அரசியலை பாஜக பணம் விளையாடும் இடமாக மாற்றிவிட்டது. பாஜகவுக்கு எந்த கொள்கையும் இல்லை.அவர்கள் ஒட்டுமொத்த அரசியலும் வியாபாரம் தான்" இவ்வாறு வேதனையுடன் கூறினார்.