இழிவானது.. வெறுப்புணர்வை பரப்பும் படம்! தி காஷ்மீர் பைல்ஸ் பார்த்து கடுப்பான கோவா திரைப்பட விழா ஜூரி
கோவா: கோவா திரைப்பட விழாவில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், இது தொடர்பாகத் தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் மிகவும் பழமையான திரைப்பட விழாவாகக் கோவா திரைப்பட விழா கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு நாடுகளின் திரைப்படங்கள் இதில் திரையிடப்படும்.
இந்தாண்டு கடந்த 20ஆம் தேதி தொடங்கிய கோவா திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 9 நாட்கள் நடைபெற்ற இந்த திரைப்பட விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்கள் திரையிடப்பட்டன.
கோவா திரைப்பட விழா
53வது சர்வதேச கோவா திரைப்பட விழாவைக் கோவா மாநில அரசு இணைந்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நடத்தியது. இந்தாண்டு கோவா திரைப்பட விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்திய பனோரமாவில் 25 திரைப்படங்கள் மற்றும் 20 திரைப்படம் இல்லாத படங்கள் ஒளிபரப்பப்பட்டன. இதில் தான் இந்த ஆண்டிற்கான இந்தியத் திரைப்பட ஆளுமை விருது நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது. கோவா திரைப்பட விழாவில் ஜெய் பீம் திரைப்படமும் திரையிடப்பட்டது.
விருதுகள்
இதற்கிடையே கடந்த 9 நாட்களாக கோலாகலமாக நடைபெற்று வந்த கோவா திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தியத் திரைப்படங்கள் மட்டுமின்றி உலகின் பிற மொழிகளைச் சேர்ந்த பல முக்கிய திரைப்படங்களும் இதில் திரையிடப்பட்டன. இந்த விழாவில் ஸ்பானிஷ் மொழி திரைப்படமா 'ஐ ஹேவ் எலக்ட்ரிக் ட்ரீம்ஸ்' சிறந்த திரைப்படமாகத் தேர்வானது. அதேபோல 'நோ எண்ட்' பட இயக்குநர் நடேர் சேவர் சிறந்த இயக்குநருக்கான சில்வர் பீக்காக் விருதைப் பெற்றார். அதே படத்தில் நடித்த வாகித் மொபாசெரிக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது.
தி காஷ்மீர் பைல்ஸ்
கோவா தலைநகர் பனாஜியில் நடந்த இந்த விழாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படமும் திரையிடப்பட்டது. அந்த திரைப்படத்திற்கு விருதுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே திரைப்பட விழாவின் கடைசி நாளன்று பேசிய தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட், "தி காஷ்மீர் பைல்ஸ்" திரைப்படம் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அது வெறுப்புணர்வைத் தூண்டும் திரைப்படம் என்றும் அது திரைப்பட விழாவுக்கு ஏற்ற திரைப்படம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இழிவான திரைப்படம்
விழா மேடையிலேயே பேசிய தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட், "தி காஷ்மீர் ஃபைல்ஸ் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். கவுரம் வாய்ந்த இதுபோன்ற சர்வதேச திரைப்பட விழாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரையிடப்பட்டது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தத் திரைப்படம் எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் தருகிறது. அது பிரசார தன்மை கொண்ட ஒரு திரைப்படமாகும். இது போன்ற கவுரவமான திரைப்பட விழாவுக்கு ஏற்ற திரைப்படம் அது இல்லை. இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டதற்கு நாங்கள் வெளிப்படையாகவே அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அவர் கூறுகிறார்.
சர்ச்சை
இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது. பலரும் நாடவ் லேபிட்டின் பேச்சை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். பாலிவுட் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மார்ச் வெளியான திரைப்படம் "தி காஷ்மீர் ஃபைல்ஸ்". 1980, 1990களில் காஷ்மீர் கிளர்ச்சி சமயத்தில் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீரி பண்டிட்டுகளை மையமாகக் கொண்டது எனச் சொல்லப்பட்டாலும் கூட, இது வெறுப்பு வாதத்தை பரப்பும் வகையிலேயே உள்ளதாகப் பலரும் சாடியிருந்தனர்.
மறுப்பு
இத்திரைப்படம் திரையரங்கில் ஓடிய போதே, ஹரியானா, மத்தியப் பிரதேசம், திரிபுரா, கோவா, கர்நாடகா, எனப் பல மாநிலங்கள் வரி விலக்கு, விடுமுறைகளை அறிவித்தன. அதேநேரம் சர்வதேச அரங்கில் அப்போதே இந்தத் திரைப்படம் சர்ச்சையைக் கிளப்பியது. சிங்கப்பூர் இத்திரைப்படத்தைத் திரையிடவே மறுத்துவிட்டது.ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தி காஷ்மீர் பைல்ஸ் இயக்குநரின் நிகழ்ச்சியும் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.