மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது தான்.. கோவா உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் ஒப்புதல்
பனாஜி : மேகி நூடுல்ஸ் பாதுகாப்பான உணவு தான் என அம்மாநில உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் அளவுக்கு அதிகமாக காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்கள் மீது பல்வேறு மாநிலங்கள் ஆய்வக சோதனை மேற்கொண்டன. அப்போது அவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்டு இருப்பது உறுதி
செய்யப்பட்டது.
இதையடுத்து, நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் 9 வித மேகி நூடுல்சுகளையும் பாதுகாப்பற்றவை மற்றும் மனிதர்களுக்கு தீங்குவிளைவிப்பவை என்று கூறி மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் தடை செய்தது.
இந்த நிலையில், மேகி நூடுல்ஸ் பாதுகாப்பான உணவு தான் என உணவு பாதுகாப்பு தர நிர்ண ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. கோவா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் 5 மாதிரி நூடுல்ஸ்களை ஆய்வுக்காக மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பியது.
இந்த ஆய்வின் முடிவில் உணவு பாதுகாப்பு விதிகள் 2011 ன் விதிகள்
அனுமதிக்கப்பட்ட அளவுடன் மேகி நூடுல்ஸ் ஒத்துபோவது
கண்டறியப்பட்டது.
மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது தான் என தெரியவந்துள்ளதையடுத்து நெஸ்லே நிறுவனம் நிம்மதியடைந்துள்ளது. இது தவிர நெஸ்லே நிறுவனத்தின் புதிய இந்திய தலைவரும், மேகி நூடுல்ஸ் சந்தையில் மீண்டும் விற்பனைக்கு விரைவில் வரும் என்று தெரிவித்துள்ளார்.