மோடி பதவியேற்பு விழாவுக்கு போகாமல் பேஸ்புக்கில் போட்டோ போட்டு சிக்கிய அமைச்சர்
பானாஜி: டெல்லிக்கு போகாமலே மோடி பிரதமராக பதவியேற்றபோது அவருடன் இருந்ததாக போலியாக பேஸ்புக்கில் படம் போட்ட கோவா சுற்றுலாத்துறை அமைச்சர் திலிப் பாருலேக்கர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கோவா மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் திலிப் பாருலேக்கர் தனது பேஸ்புக் பக்கத்தில் நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவில் ஒன்றாக தான் நிற்பதுபோல உள்ள படத்தை வெளியிட்டிருந்தார். போட்டோவுக்கு கீழே, "குடியரசு தலைவர் மாளிகையில் நரேந்திரமோடி பதவியேற்பு நிகழ்ச்சியின்போது இந்த படம் எடுக்கப்பட்டது" என்ற விளக்கம்வேறு இடம் பெற்றிருந்தது. இதைப்பார்த்த பேஸ்புக் பயனாளிகள் லைக்குகளும், கமென்டுகளுமாக போட்டு தாக்கினர்.
இந்த பேஸ்புக் பக்கத்தை பார்த்த தேசியவாத காங்கிரசின் துணை தலைவர் தரஜானோ டிமெல்லோ அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் அது போலி படம் என்பதை சில குறிப்புகளை வைத்து அவர் தெரிந்துகொண்டார்.
இதுபற்றி தரஜானோ செய்தியாளர்களிடம் கூறுகையில், "குறிப்பிட்ட அந்த படம் மோடி பதவியேற்பு விழாவில் எடுக்கப்படவில்லை. மோடி பதவியேற்பு விழாவில் உடுத்தியிருந்த ஆடைக்கும், பேஸ்புக் படத்தில் உடுத்தியுள்ள ஆடைக்கும் நடுவே வேறுபாடு உள்ளது. மேலும், அமைச்சர் திலிப் திங்கள்கிழமையன்று டெல்லிக்கு போகவில்லை. கோவாவில்தான் இருந்தார். மோடியை பாஜகவை சேர்ந்த ஒரு மாநில அமைச்சரே அசிங்கப்படுத்திவிட்டார்.
நாட்டு மக்களை ஏமாற்றிய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும். கோவா முதல்வர் இதுபோன்ற 'அழுகிய ஆப்பிள்களை' அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்" என்றார். பாஜக செயற்குழு கூட்டம் கடந்தாண்டு ஜூன் மாதம் கோவாவில் நடந்தது. அப்போது மோடியுடன் நின்று திலிப் பாருலேக்கர் எடுத்த போட்டோவை, பிரதமர் பதவியேற்பு விழா போட்டோ என்று கப்சா விட்டு பதிவேற்றம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.