கோவா முதல்வராகிறார் மனோகர் பாரிக்கர் - செவ்வாய்கிழமை பதவியேற்பு
கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் செவ்வாய்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பனாஜி: கோவாவில் சிறிய கட்சிகள், சுயேச்சைகள் ஆதரவை பெற்ற பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது. முதல்வராக மனோகர் பாரிக்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். செவ்வாய்கிழமை அவர் முதல்வராக பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 15 நாட்களுக்குள் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க கோவாமாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
40 தொகுதிகள் கொண்ட கோவாவில் ஆட்சி அமைக்க தேவையான 21 தொகுதிகளை எந்த கட்சியும் பிடிக்கவில்லை. இதையடுத்து அங்கு தொங்கு சட்டசபை ஏற்பட்டது.
கோவாவில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 17 தொகுதிகளையும் பாஜக 13 தொகுதிகளையும் வென்றுள்ளன. பிற கட்சிகள் 10 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. கோவாவில் ஆட்சி அமைக்க தேவையான 21 தொகுதிகளை எந்த கட்சியும் பிடிக்கவில்லை.
தொங்கு சட்டசபை
கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க மேலும் 4 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கவேண்டும் என்றால் மேலும் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலை உருவானது.
மனோகர் பாரிக்கர்
பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் மனோகர் பாரிக்கர் மீண்டும் கோவா அரசியலுக்கு திரும்பி முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என அந்த மாநில பாஜக எம்எல்ஏக்கள் விருப்பம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டத்தில், மனோகர் பாரிக்கர் கோவா அரசியலுக்கு திரும்பி முதல்வராக பதவி ஏற்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
21 எம்எல்ஏக்கள் ஆதரவு
கூட்டணிக் கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு பாஜகவிற்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து பனாஜி நகரில் கோவா ஆளுநர் மிருதுளா சின்காவை சந்தித்து, தனக்கு 21 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி, ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு உரிமை கோரினார். கோவா பார்வர்டு கட்சி, மராட்டியவாடி கோமந்த கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த தலா 3 எம்.எல்.ஏ.க்கள், 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் ஆகியோர் தன்னை ஆதரிப்பதாக கூறி அவர்களுடைய ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் அளித்தார்.
|
ஆளுநர் அழைப்பு
இதனைத் தொடர்ந்து கோவா மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா மனோகர் பாரிக்கரை முதல்வராக பதவியேற்க அழைப்பு விடுத்தார். முதல்வர் பதவியேற்புக்கு பின்னர் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். நாளை செவ்வாய்க் கிழமை பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.