கால அவகாசம் தர கோவா போலீஸ் மறுப்பு- எந்நேரத்திலும் தருண் தேஜ்பால் கைது!!
டெஹல்கா வார இதழில் பணிபுரிந்த சக பெண் பத்திரிகையாளருக்கு கோவா நிகழ்ச்சி ஒன்றில் பாலியல் தொந்தரவு கொடுத்தார் தருண் தேஜ்பால் என்பது புகார். இதைத் தொடர்ந்து கோவா போலீசார் தருண் தேஜ்பால் மீது பாலியல் பலாத்கார முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக டெஹல்கா நிர்வாக ஆசிரியராக இருந்த சோமா செளத்ரி உள்ளிட்டோரிடம் 9 மணி நேரம் கோவா போலீசார் டெல்லியில் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து தருண் தேஜ்பால், முன் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் இன்று மாலை 3 மணிக்குள் கோவா போலீசில் தருண் தேஜ்பால் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. இன்று கோவா போலீஸ் முன்பு தருண் தேஜ்பால் ஆஜராகும் நிலையில் விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனிடையே தாம் கோவா போலீஸ் முன்பு ஆஜராக வரும் சனிக்கிழமை வரை கால அவசகாசம் அளிக்க வேண்டும் என்று தருண் தேஜ்பால் அனுப்பிய கடிதம் "Dauna Paulo" போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கோவா போலீஸ் உயர் அதிகாரி ஓபி மிஸ்ரா, தருண் தேஜ்பாலுக்கு கால அவகாசம் தர மறுத்துவிட்டோம். நாங்கள் டெல்லியில் இருந்து அவர் கோவா வரும் காலத்தையும் கணக்கில் கொண்டிருக்கிறோம் என்றார். இதனால் தருண் தேஜ்பால் எந்நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என்று கூறப்படுகிறது.