வாக்களிக்க வரும் இளம் பெண்களுக்கு பிங்க் கரடி பொம்மை கிஃப்ட்.. கோவா தேர்தல் ஆணையம் கலக்கல்
பானாஜி: கோவா மாநில சட்டசபை தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க வந்த பெண்களுக்கு பிங்க் நிற கரடி பொம்மை பரிசாக வழங்கப்பட்டது.
பஞ்சாப், கோவா மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாபில் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் தலைமையில் அகாலிதளம்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கோவாவில் மொத்தம் 40 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு முதல்வர் பர்சேகர் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது.
காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்துள்ளதால் கடும் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. பாஜக 36 தொகுதிகளிலும், காங்கிரஸ் 37 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 39 இடங்களிலும் களமிறங்கியுள்ளன.
இந்நிலையில் பெண் வாக்காளர்களை கவரும் வகையில், முதல் முறையாக வாக்களிக்க வரும் இளம் பெண் வாக்காளர்களுக்கு பிங்க் வண்ண சிறு கரடி பொம்மையை பரிசளித்து வருகிறது கோவா தேர்தல் ஆணையம். பெரும்பாலான பெண்களுக்கு பிங்க் வண்ணம் பிடித்த நிறம். கரடி பொம்மையும் இஷ்டம். எனவே இப்படி ஒரு யோசனை உதித்துள்ளது தேர்தல் ஆணையத்திற்கு. எதிர்பார்த்தபடியே பஞ்சாப்பை ஒப்பிட்டால் கோவாவில் மதியம் வரையிலான நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாகவே உள்ளது.
குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க வலியுறுத்தி இலவசங்கள் கொடுக்கும் நாட்டில், வாக்கு சாவடிக்கு வரவைக்க இலவசம் கொடுக்கிறது தேர்தல் ஆணையம். சபாஷ்.