தொண்டையில 'கிச் கிச்' ஓ.கே.. ஆனால் கோவாவில் 'இச் இச்'.. நோ!
பனாஜி: பொது இடத்தில் சுற்றுலாப் பயணிகள் முத்தமிட்டுக் கொள்ளக் கூடாது என கோவாவில் உள்ள கிராமம் ஒன்று தடை விதித்துள்ளது.
கும்மாளத்திற்கு பெயர் போன சுற்றுலாத் தலமான கோவாவில் இந்த தடை விதிக்கப்பட்டிருப்பது பலரை வியப்புக்குள்ளாக்கியுள்ளது.
இருப்பினும் பொது இடங்களில் அசுத்தப்படுத்தும் வகையில் நடப்பதைத் தவிர்க்கவே இந்த தடையாம்.
சுற்றுலாத் தளம் கோவா...
இந்தியாவில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் கோவாவும் ஒன்று. உலகின் பல இடங்களில் இருந்தும் இங்குள்ள கடற்கரைகளைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்.
முகம் சுளிக்க வைக்கும் வகையில்...
இயற்கை அழகை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகளில் சிலர், பொது இடம் என்றும் பாராமல் அத்துமீறி மற்றவர்களை முகம் சுளிக்க வைப்பதாக பொதுவான குற்றச்சாட்டு உள்ளது.
முண்டோ கிராமத்தில் நோ முத்தம்...
இது கோவாவில் உள்ள கடலோர கிராமமான சல்வடார் டி முண்டோ என்ற கிராமத்து மக்களுக்கு பிடிக்கவில்லையாம்.
வாய்களுக்குத் தடை...
இதனால், கிராம பஞ்சாயத்தை கூட்டி பொது இடங்களில் முத்தம் கொடுப்பதை தடை செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
குடிச்சாலும் குத்தம் தான்...
முத்தம் மட்டுமின்றி இந்தக் கிராமத்தில் மது அருந்தக் கூடாது, சத்தமாக பாடல் பாடி ஆடக் கூடாது என பல்வேறு வரைமுறைகளை அவர்கள் வகுத்துள்ளனர். இதனை கிராமத்தின் நுழைவாயிலிலேயே அவர்கள் எழுதி வைத்துள்ளனர்.