தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க.. கோதாவரியுடன் காவிரி, கிருஷ்ணாவை இணைக்கப் போறோம்.. கத்கரி
அமராவதி காவிரி ஆற்றுடன் கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்டம் தயாராகி விட்டதாக மத்திய நீர்வளத்துரை அமைச்சர் நிதின் கத்கரி கூறியுள்ளார்.
Recommended Video
அமராவதி: காவிரி ஆற்றுடன் கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்டம் தயாராகி விட்டதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கத்கரி கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலத் தலைநகர் அமராவதியில் பா.ஜ.க. நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. அப்போது பேசிய மத்திய நீா்வளத்துறை அமைச்சா் நிதின் கத்கரி நதிநீர் இணைப்பு குறித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது கோதாவரி நதியின் நீர் கிட்டத்தட்ட ஆயிரத்து 100 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. மறுபக்கம் கர்நாடகம், தமிழகம் இடையே நதிநீர்ப் பங்கீடுப் பிரச்சனை இருக்கிறது. இரண்டையும் சீர் செய்யும் வகையில் கோதாவரி, காவிரி, கிருஷ்ணா நதிகள் இணைப்பு இருக்கும்
தமிழகம், கா்நாடகம் இடையே 45 டி.எம்.சி. தண்ணீருக்காக பிரச்சினை உள்ளது. கோதாவரி நதியுடன் காவிரி மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்டம் இதை தீர்க்கும். இதற்கான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. விரைவில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் போது அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
இந்தத் திட்டம் கால்வாய்கள் மூலம் இல்லாமல் இரும்புக் குழாய்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. அமெரிக்காவில் வாழும் ஆந்திர பொறியாளா் ஒருவா் இந்த சிறப்பு மிக்க தொழில்நுட்பத்தை பரிந்துரைத்துள்ளார். இந்த திட்டம் கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய 4 தென்மாநிலங்களின் நீர் பங்கீடு பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும். இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நீர் ஆதாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் முன்னிலையில் உள்ளது என்றார் கத்கரி.
தனது பேச்சின்போது பாஜகவுடன் இருந்த கூட்டணிக் கட்சிகள் சில இப்போது பாஜக ஆட்சியை விமர்சித்து வருவது கவலை அளிப்பதாக கத்கரி தெரிவித்தார்.