கோத்ரா கலவர 'டிசைனர்' மோடி சகிப்புத்தன்மை பற்றி பேசப்படாது... காங்கிரஸ் பதிலடி
டெல்லி: கோத்ரா கலவரத்தின் பொறியாளரான நரேந்திர மோடி, சகிப்புத்தன்மை பற்றி பேசக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, நாட்டு மக்களிடையே சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக கூறி, அறிவுஜீவிகள் தாங்கள் வாங்கிய விருதுகளை திருப்பி அளித்து வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. இதனால் கோபமடைந்த பிரதமர் நரேந்திர மோடி, பீகார் மாநிலத்தில் நடந்த இன்றைய தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரசை கண்டித்தார்.
இந்திரா காந்தி கொல்லப்பட்டதை தொடர்ந்து, 1984ம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரம் நடந்ததையும், அதில் பலர் படுகொலை செய்யப்பட்டதையும், காங்கிரசுக்கு அதில் தொடர்புள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளதையும் சுட்டிக்காட்டிய மோடி, சகிப்புத்தன்மை பற்றி காங்கிரஸ் பேச தகுதியில்லை என்றார்.
இதுகுறித்து பேட்டியளித்த காங்கிரஸ், தலைவர்களில் ஒருவரான பி.சி.சாக்கோ "டெல்லியில் நடைபெற்ற கலவரத்திற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்டுவிட்டது. ஆனால் கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரத்திற்காக அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திரமோடி மன்னிப்பு கேட்கவில்லை.
டெல்லியில் நடந்த கலவரம், அரசின் கைமீறி நடந்தது. கோத்ரா கலவரத்தின் பொறியாளராக இருந்தது மோடி. அவரது கட்டுப்பாட்டிலேயே அனைத்தும் நடந்தது. மோடி இந்த விவகாரத்தை கிளப்பாமல் இருப்பதே அவருக்கு நல்லது" என்றார்.