சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு என்னை டார்ச்சர் செய்தார்: மருமகள் போலீசில் பரபரப்பு வாக்கு மூலம்
இந்தூர்: சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு, அவரது மகன் நாராயண் சாயும் தன்னை கொடுமைபடுத்தியதாக ஜானகி நாரயண் போலீசில் வாக்கு மூலம் அளித்துள்ளார். இதன் மூலம் இருவருக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது.
பாலியல் வழக்குகளில் சிக்கிய சாமியார் ஆசாராம் பாபு கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஜோத்பூர் சிறையிலும், அவரது மகன் நாராயண் சாய் சூரத் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது குடும்ப வன்முறை வழக்கு தொடர்ந்த நாராயண் சாயின் மனைவி ஜானகியும் (வயது 38) நேற்று போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதில் கடந்த 1997 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி நாராயண் சாயை நான் திருமணம் செய்தேன். திருமணத்திற்குப் பிறகு நாராயண் சாய்க்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டதால் நான் மனரீதியான சித்ரவதையை அனுபவித்தேன். இந்த கள்ளத்தொடர்பை கண்டித்தபோது என்னை வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்கும்படி மிரட்டினார். தனது பெண் சீடருடன் தொடர்பு வைத்து அவரை கர்ப்பமாக்கினார்.
என்னை விவாகரத்து செய்தபின்னர் மறுமணம் செய்யப்போவதாக மிரட்டி வந்த அவர், பெண் சீடரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. போபாலில் உள்ள மதிப்புமிக்க சொத்தை தானமாக வழங்கும்படி மறைந்த என் தந்தையிடம் ஆசாராம் நெருக்கடி கொடுத்தார்" என்று கூறியுள்ளார். மேலும் இருவருக்கும் திருமணம் ஆன போட்டோவையும் போலீசில் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாயுக்கும் நெருக்கடி அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது.