பெங்களூரு சிறையில் சசிகலா காலில் விழுந்த கோகுல இந்திரா, சி.ஆர். சரஸ்வதி, வளர்மதி
பெங்களூரு : சொத்துக்குவிப்பு வழக்கிற்காக பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவைப் பார்க்கப் போன சி.ஆர்.சரஸ்வதி, கோகுல இந்திரா மற்றும் வளர்மதி ஆகியோர் அவரது காலில் விழுந்து கும்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முதல் குற்றவாளி ஜெயலலிதா மரணமடைந்தாலும் உச்சநீதிமன்றத்தில் இருந்த மேல் முறையீட்டு வழக்கு விடாது கருப்பாக விரட்டியதில் கூட்டுக்குற்றவாளிகள் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளனர். ஆளுக்கு தலா. 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மூவரும் பெங்களூருவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவின் ஆதரவுடனும், ஆலோசனையுடனுமே தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது.
தினகரன் விசிட்
சிறையில் இருக்கும் சசிகலாவை அவரது அக்காள் மகன் தினகரன், ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் சென்று பார்த்து வந்தனர். வழக்கறிஞர்களும் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அனுமதி மறுப்பு
சசிகலாவை சந்திக்க அதிமுகவினர் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது. பெங்களூரு சென்று சிறையில் அனுமதி கிடைக்காமல் அமைச்சர்களும் திரும்பினர். பெண் நிர்வாகிகளுக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சசிகலாவை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.
அமைச்சர்கள் சந்திப்பு
கடந்த வாரம் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, செங்கோட்டையன் உள்ளிட்ட 4 பேர் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அரசியல் நிலவரம் குறித்தும் பேசியதாக தெரிகிறது. இதற்கு பல தரப்பில் இருந்தும் விமர்சனம் எழுந்தது.
வளர்மதி - கோகுல இந்திரா
சிறை நிர்வாகம் வாரம் ஒருமுறை மட்டுமே சசிகலாவை சந்திக்க அனுமதிக்க முடியும் என்று கூறியதை கடந்த முறை ஏமாற்றத்துடன் திரும்பியவர்கள் நேற்று முறைப்படி மனு அளித்து சி.ஆர்.சரஸ்வதி, கோகுல இந்திரா மற்றும் வளர்மதி ஆகிய மூவரும் சசிகலாவை சந்தித்துள்ளனர்.
காலில் விழுந்து கும்பிடு
சசிகலாவை நேரில் சந்தித்து அவருக்கு பழங்களை கொடுத்த மூவரும் படக்கென்று அவரது காலில் விழுந்து கும்பிட்டார்களாம். சிறையில் வந்து விழுந்து கும்பிடுகிறார்களே என்று அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர். சசிகலா இருப்பது பரப்பன அக்ரஹாரா சிறை என்பதை மறந்துவிட்டு, ஏதோ அதிமுக அலுவலகத்தில் காலில் விழுவது போல விழுந்து எழுந்தனர்.
சி.ஆர். சரஸ்வதி
சசிகலா சிறைக்கு சென்று 20 நாட்களுக்கு மேலாகி விட்டதால் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் பேசிய பின்னர் மூவரும் சிறையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர். ஆனால் என்ன பேசினோம் ஏது பேசினோம் என்பது பற்றி மூச்சு கூட விடவில்லை. நல்ல வேலை சிறையில் சின்னம்மா இட்லி சாப்பிட்டாங்க என்று சொல்லாமல் போனாரே சி.ஆர் சரஸ்வதி என்பதுதான் பெரிய ஆறுதல்.