பெண்ணின் வயிற்றுக்குள் வளையல், மூக்குத்தி, நாணயங்கள் - அதிர்ச்சியடைந்த டாக்டர்கள்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பும் மாவட்டத்தில் வலியால் அவதிப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்து ஒன்றரை கிலோ தங்க நகைகளும், நாணயங்களும் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டுள்ளது. வளையல், மூக்குத்தி, தோடு, கடிகாரம் என நூற்றுக்கணக்கான பொருட்கள் பெண்ணின் வயிற்றில் இருந்ததை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேற்குவங்கம் மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 26 வயதான பெண் வயிற்றுக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்ததில், நகைகள் மற்றும் நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
26 வயதான அந்த பெண்ணிற்கு மனதளவில் ஏதோ ஒரு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் போல, மாமாவின் நகைக்கடையில் இருந்து நகைகள் காணமல் போனதாக விசாரிக்கும் போதே அந்த பெண் அழுது ஆர்ப்பாட்டம் செய்வாராம். அப்புறம்தான் வயிற்றுவலியால் துடித்துள்ளார். ராம்புரத் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த டாக்டர்கள் அதிர்ந்துதான் போனார்கள்.
வயிற்றில் கிலோ கணக்கில் நகைகள் இருந்தன. அதை அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர். வரிசையாக வளையல்கள், மூக்குத்திகள், செயின், மோதிரம், கடிகாரம் என வரிசையாக எடுத்துப்போட்டனர். கூடவே 5 ரூபாய், பத்து ரூபாய் நாணயங்களும் இருந்தன. தங்கம் மட்டுமல்லாது செம்பு, பித்தளையால் ஆன நகைகளும் இருந்தன.
ஒருவழியாக அத்தனை பொருட்களையும் ஆபரேசன் செய்து எடுத்தனர். மொத்த நகைகளின் மதிப்பு ஒன்றரை கிலோ என்று மருத்துவர்கள் கூறினர்.
90 நாணயங்களும் அகற்றப்பட்டதாக டாக்டர்கள் கூறினர்.
ஏன் இந்த பெண்ணின் வயிற்றில் இத்தனை பொருட்கள் இருக்கின்றன என்று அவரது அம்மாவிடம் கேட்டதற்கு, எனது மகளுக்கு மனநலம் சரியில்லை, சகோதரரின் கடையில் இருந்து ஆபரணங்களை எடுத்து சாப்பிட்டிருக்கலாம் என்று கூறினார். காணாமல் போனதாக தேடப்பட்ட நகைகள் பெண்ணின் வயிற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பிர்பும் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.