நா வந்துட்டேன்னு சொல்லு.. 20 கி நகையோட திரும்பி வந்துட்டேனு சொல்லு!
கோல்டன் பாபா இம்முறை 20 கிலோ தங்க நகைகளுடன் கன்வார் யாத்திரையில் பங்கேற்றுள்ளார்.
டெல்லி : கன்வார் யாத்திரைக்காக கோல்டன் பாபா இம்முறை சுமார் ரூ. 6 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்க நகைகளை அணிந்து வந்துள்ளார்.
ஹரித்வாரிலிருந்து டெல்லி வரை நடைபெறும் 25வது கன்வர் யாத்திரையை முன்னிட்டு உத்தரக்கண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கோல்டன் பாபா என்கிற சாமியார் 20கிலோ தங்க நகைகளை அணிந்துகொண்டு வந்துள்ளார்.
தங்க நகைகளை அதிகம் நேசிக்கும் சாமியாரான இவர், முன்பு தொழிலதிபராக இருந்தவர். இவரது இயற்பெயர் சுதிர் மக்காரார் சிவ பக்தர். ஆண்டுதோறும் விதவிதமான எடை அதிகம் உள்ள தங்க நகைகளை அணிந்து வருவது இவரது வழக்கம்.
தங்க நகைகள்:
அதன்படி, இந்தாண்டு சுமார் 20 கிலோ மதிப்புள்ள தங்க நகைகளை அவர் அணிந்து வந்துள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ. 6 கோடி எனக் கூறப்படுகிறது. அதிக தங்க நகைகள் அணிந்திருப்பதால், பாதுகாப்பு கருதி துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவர் எப்போதும் அவருடனேயே உள்ளார்.
பார்வைக் கோளாறு:
கழுத்தில் அதிக தங்க நகைகளை அணிவதால், அவர் கழுத்து நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது கண் பார்வையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும் ஆண்டுகளில் இந்த யாத்திரையில் பங்கேற்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
21 தங்கச் சங்கிலிகள்:
கடந்தாண்டு, கோல்டன் பாபா சுமார் 14 கிலோ எடையுள்ள தங்க நகைகளை அணிந்து வந்திருந்தார். அதாகப்பட்டது, 21 தங்கச்சங்கிலிகள், 21 சாமி டாலர்கள் மற்றும் கைச்சங்கிலிகள் இதில் அடக்கம்.
தங்கச் சட்டை:
இந்தப் பட்டியலில் இம்முறை புதிதாக இரண்டு தங்கச்சங்கிலி இணைந்துள்ளது. இதன் எடை மட்டும் இரண்டு கிலோ ஆகும். அவற்றிலும் டாலர்கள் உள்ளது. இது தவிர யாத்திரையின் போது சமயங்களில் அவர் தங்கச் சட்டை அணிவதும் வழக்கம் ஆகும்.