சர்வதேச வான்வழி தடத்தில் இம்பாலும் இடம்பெற்றது! மியான்மரிலிருந்து விமான சேவை இயக்கம்!!
இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலும் தற்போது சர்வதேச வான்வழி தடத்தில் இடம்பிடித்துள்ளது. மியான்மர் நாட்டில் இருந்து முதல் முறையாக இம்பாலுக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் விமான நிலையம் உள்நாட்டு விமான நிலையமாகவே இருந்து வந்தது. பொதுவாக டெல்லி, கொல்கத்தா, குவஹாத்தி ஐஸ்வால் ஆகிய இடங்களில் இருந்துதான் இம்பாலுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மணிப்பூர் மாநிலத்தின் எல்லையோர நாடாக மியான்மர் இருந்து வருகிறது. இருப்பினும் இதுவரை சாலைவழியாகத்தான் மியான்மர் நாட்டில் இருந்து மணிப்பூர் வழியே இந்தியாவுக்கு சரக்குப் போக்குவரத்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது மியான்மர் நாட்டின் மண்டலாய் நகரில் இருந்து 166 பேருடன் முதலாவது சர்வதேச விமானம் நேற்று இம்பால் வந்தடைந்தது. இந்த விமான சேவையை கோல்டன் மியான்மர் என்ற தனியார் நிறுவனம் இயக்குகிறது.
இம்பாலில் நடைபெறும் மணிப்பூர் -ஷாங்காய் சுற்றுலா விழாவை முன்னிட்டு இந்த விமான சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக இம்பால் வந்த சர்வதேச விமானத்தில் மியான்மரின் மண்டலாய், ஷகாய்ங் மாகாண முதல்வர்கள், இந்திய தூதரக அதிகாரிகள், மியான்மர் தமிழ் பயணிகள் உட்பட 166 பேர் இம்பால் வருகை தந்தனர். அவர்களை மணிப்பூர் முதல்வர் இபோபி மற்றும் மாநில அமைச்சர்கள் வரவேற்றனர்.
மியான்மர் மாகாண முதல்வர்களை மோரே தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சேகர் மற்றும் ஏராளமான அமைப்புகளின் பிரமுகர்களும் வரவேற்றனர். மோரே தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழர் பாரம்பரிய முறையிலான பொன்னாடை அணிவித்து வரவேற்கப்பட்டது.
இந்த விமான சேவை மூலம் இதுவரை தரைவழியாக நடைபெற்று வந்த சரக்கு போக்குவரத்து சேவை எளிதாகி இருப்பதுடன் இருநாடுகளிடையேயான வர்த்தகம் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.