மனக்குமுறல் இனி வேண்டாம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மோடி அரசு!
டெல்லி: 01.01.2004க்கு முன்னர் பணி நியமனத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு.., ஆனால் 01.01.2004 அன்று அல்லது அதற்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசிடமிருந்து இன்பத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறையின் அறிவிப்பில்தான் இந்த குட் நியூஸ் இடம் பெற்றுள்ளது. அதாவது, 01.01.2004க்கு முன்னர் நியமனம் பெறுவதற்கான தேர்வு முடிவடைந்தது, ஆனால் ஏதோ காரணங்களுக்காக, 01.01.2004ம் தேதி அல்லது அதற்குப் பிறகு சேவையில் சேர்ந்த அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் இப்போது 'மத்திய சிவில் சேவைகள் (ஓய்வூதியம்) 1972' விதிகளின் கீழ் ஓய்வூதிய பலன்களை பெற முடியும். என்பிஎஸ் (NPS) எனப்படும் தேசிய ஓய்வூதிய முறை திட்டத்தின்கீழ் இவர்கள் வரத்தேவையில்லை.
பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்திற்கான இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், வெளியிட்ட ஒரு அறிக்கையில், "இந்த உத்தரவு 2004 க்கு முன்னர் பணி நியமனம் செய்யப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆப்ஷனை அளிக்கிறது. அவர்கள் மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள், 1972 பலனை பெறலாம், அல்லது தேசிய ஓய்வூதிய முறையிலேயே தொடரலாம். அது அவர்களின் விருப்பமாக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த ஆப்ஷனை பயன்படுத்த கடைசி தேதி 31/05/2020 என்றும் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார். இந்த நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் தங்கள் விருப்பத்தை தேர்ந்தெடுக்கத் தவறியவர்கள் தொடர்ந்து தேசிய ஓய்வூதிய முறையின் கீழ்தான் வருவார்கள்.
மத்திய அரசின் இந்த உத்தரவு பல மத்திய அரசு ஊழியர்களுக்கு நிம்மதியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவர்களில் சிலர் 1972ம் ஆண்டு சி.சி.எஸ் (ஓய்வூதியம்) விதிகளின் கீழ் தங்களை கொண்டுவர நீதிமன்றங்களை நாடியிருந்தனர். ஏனெனில் அந்த ஓய்வூதிய திட்டத்தில்தான், பலன்கள் அதிகமாகும்.