மெரினா பாணியில் தன்னெழுச்சியாக வந்த இளைஞர்கள்.. உடைந்த பாலத்தை 5 மணி நேரத்தில் சரி செய்து புரட்சி
இடுக்கி: இடுக்கி மாவட்டம் கட்டப்பனா அருகே தன்னெழுச்சியாக இளைஞர்கள் ஒன்றிணைந்து வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தை ஐந்து மணி நேரத்தில் சீரமைத்துள்ளார்கள். முன் அனுபவமே இல்லாத நிலையிலும், அடை மழையையும் பொருட்படுத்தாமல், இளைஞர்கள் குழு பேஸ்புக் லைவ் மூலம் ஒன்றிணைந்து ஒரு கிராமத்திற்கு பாதையை உருவாக்கி தந்துள்ளனர்.
கேரளாவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக முல்லை பெரியாறு ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான இடுக்கி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மிக கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழையால் தான் மூணாறு அருகே ராஜமலையில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. பலர் மண்ணில் புதைந்து போயினர். உடல்களை மீட்கும் பணி 6 நாட்களாக நடந்து வருகிறது. உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் மிகப்பெரிய அளவில் உதவி புரிந்து வருகிறார்கள்.
இடுக்கி நிலச்சரிவு.. 7வது நாளாக நடக்கும் மீட்பு பணி.. பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வு.. மூணாறில் சோகம்!
முல்லை பெரியாறு
இந்நிலையில் இடுக்கி மாவட்டம் வண்டி பெரியார் அருகே உள்ளது மலமாலா கிராமம். 100 க்கும் மேற்பட்ட தோட்டக் குடும்பங்கள் வாழும் அந்த கிராமத்தை இணைக்கும் மலாமாலா-சப்பாத் சாலையில் பெரியாறு ஆறு ஓடுகிறது. அந்த பாலம் கனமழையால் நீரில் மூழ்கி சேதம் அடைந்தது. இந்நிலையில் பாலத்தை சரிசெய்ய இளைஞர்கள் முயன்றனர்.
வெள்ள நீரில் இறங்கினர்
இதற்காக வெள்ள நீரில் மூழ்கி சிதறிய கற்களை சேகரித்தனர். நீர் ஓட்டத்திற்குத் தடையாக இருந்த பெரிய மரக்கட்டைகளை தண்ணீரில் இறங்கி அகற்றினர். மிகவும் ஆபத்தான அந்த பணியை அவர்கள் துணிச்சலுடன் செய்தனர். உடலில் கயிறு கட்டி தண்ணீரில் இறங்கிய அவர்கள் சேகரிக்கப்பட்ட கற்களை ஆற்றின் பக்கங்களிலும் வைத்தனர். அத்துடன் ஆற்றின் பாதையில் மணல் மூட்டைகளை அடுக்கினர். , காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை கனமழை மற்றும் வெள்ளத்தை பொருட்படுத்தாமல் பாலத்தை உருவாக்கி உள்ளனர். இந்த தகவலை கட்டப்பனாவின் நண்பர்கள் குழுவின் ஜோஷி மணிமாலா தெரிவித்தார்.
பாலம் இடிந்து விழுந்தது
முல்லை பெரியாறு அணையில் இருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ளது மலாமாலா கிராமம். 2018 வெள்ளத்தின் போது வண்டிபெரியாறு நகரை இக்கிராமத்தை இணைக்கும் சந்திப்பு பாலம் இடிந்து விழுந்தது. அதன் பின்னர் கிராம மக்கள் தற்காலிக ஏற்பாடுகளை நம்பித்தான் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக, வெள்ளத்தால் மலாமாலா கிராமம் மற்ற பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது. ஆற்றின் மறுபுறம் வெள்ளநீரில் நீந்த தெரிந்த ஒரு சிலரை தவிர மற்ற எவராலும் அத்தியாவசியமான தேவைக்கு கூட வெளியே செல்ல முடியவில்லை.
தேயிலை தொழிலாளர்கள்
கிராமத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலை துயரமாக இருந்தது. இதனால் துயரத்தை கண்டு வேதனை அடைந்த இளைஞர்கள் பாலத்தை சரி செய்ய தன்னெழுச்சியாக களம் இறங்கினார்கள். இதுபற்றி ஜோஷிமணி மாலா என்பவர் கூறுகையில், மலாமாலா கிராமத்தில் வசித்த பெரும்பாலானோர் தோட்டத் தொழிலாளர்கள், அவசரகாலத்தில் நகரத்தை அடைய அவர்களுக்கு வேறு வழிகள் இல்லை. தேயிலைத் தோட்டங்கள் வழியாக வண்டிபெரியாருக்கு சிறிய சாலைகள் இருந்தாலும், அவற்றை அவசர காலங்களில் பயன்படுத்துவது பாதுகாப்பற்றது.
பேஸ்புக்கில் லைவ்
எனவே பாலத்தை சரி செய்ய கட்டப்பனா நண்பர்கள் குழுவைச் சேர்ந்த எங்கள் நண்பர்களுடன் களம் இறங்கினோம் ஆரம்பத்தில் ஒரு சிலரே பணிகளை செய்தோம். பேஸ்புக்கில் நேரலை செய்த பின்னர் ஏராளமானோர் இதை சரி செய்ய முன்வந்தனர். ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்டியன் யூத் இயக்கம் (OCYM) மற்றும் கட்டப்பனா ஆஃப்-ரோட் கிளப் ஆகியவையும் நண்பகலுக்குள் இணைந்தனர். இதனால் எங்கள் வலிமை 150 பேர் ஆக அதிகரித்தது. அவர்கள் அனைவரும் தானாக முன்வந்து பாலத்தை சரி செய்தனர்.. இறுதியில், கிராமவாசிகளின் மகிழ்ச்சிக்காக நாங்கள் சில வாகனங்களை பாலத்தின் மீது ஓட்டினோம், "என்று ஜோஷி கூறினார்.
பாலத்தை சரி செய்ய உத்தரவு
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மலாமாலாவில் உள்ள பாத்திமா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டு முதல் இரண்டு முறை கேரள உயர்நீதிமன்றத்தை அணுகி தங்கள் கஷ்டங்களுக்கு தீர்வு காண கோரினார்கள். மூன்று வாரங்களுக்கு முன்பு, மாணவர்களிடமிருந்து 1,400 க்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்ததால், பாலத்தை சரிசெய்ய உயர்நீதிமன்றம் கேரள அரசுக்கு உத்தரவிட்டது. மாணவ சக்தியும், மக்கள் சக்தியும் ஒன்றிணைந்தால் எந்த வெள்ளத்தையும் எந்த துயரத்தையும் மக்களால் எதிர்கொள்ள முடியும் என்பது இந்த சம்பவம் ஒரு சான்று.