இந்தியா, தெஹ்ரிக் தலிபான்களுக்கு எதிராக ஆப்கன் தலிபான்களுடன் கை கோர்க்கும் பாகிஸ்தான்!
டெல்லி: இந்தியா மற்றும் தெஹ்ரிக் இ தலிபான்களுக்கு எதிராக முல்லா ஒமர் தலைமையிலா ஆப்கான் தலிபான்களை இறக்கிவிட பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெஷாவர் தாக்குதலைத் தொடர்ந்து 'நல்ல தலிபான் -கெட்ட தலிபான்' என்ற கருத்தை முன்வைத்து பேசியிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப். பெஷாவரில் பிஞ்சு குழந்தைகள் மீது தாக்குதலை நடத்தியதற்கு தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதே தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பைதான் 2013ஆம் ஆண்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நவாஸ் ஷெரீப்தான். ஏனெனில் நவாஸ் ஷெரீப் தேர்தலில் வெல்வதற்கு உதவியாக இருந்தது தெஹ்ரிக் இ தலிபான்கள்தான்.
ஆனால் பாகிஸ்தான் ராணுவமோ, ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்போ தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பில் பல பிளவுகளை ஏற்படுத்தியது. தற்போது கூட ஆபரேஷன் ஜர்ப்-இஅராப் என்ற பெயரில் தெஹ்ரிக் தலிபான்கள் மீது உக்கிர தாக்குதலை நடத்தி வருகிறது பாகிஸ்தான் ராணுவ. இதற்கான பதிலடியைத் தான் பாகிஸ்தான் நாள்தோறும் பார்த்து வருகிறது. பெஷாவர் தாக்குதலும் இதற்காக என்று தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பும் கூறியுள்ளது.
நவாஸ் ஷெரீப் கூறுகிற 'நல்ல- கெட்ட தலிபான்' என்ற யுக்தியை பாகிஸ்தான் நீண்டகாலமாகவே பயன்படுத்தி வருகிறது. அதாவது ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறுவதை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்த யுக்தியை பாகிஸ்தான் கடைபிடித்து வருகிறது.
அதாவது முல்லா ஒமர் தலைமையிலான தலிபான்கள்- நல்ல தலிபான்களாம்.. அவர்கள் பாகிஸ்தானியரை கொல்லாதவர்கள்;
தெஹ்ரிக் இ தலிபான்கள் கெட்ட தலிபான்கள்.. அவர்கள் பாகிஸ்தானியரை கொல்பவர்கள் என்பதுதான் இதன் அர்த்தம்.
நவாஸ் ஷெரீப் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் பாகிஸ்தான் அரசு என்பது ராணுவம் மற்றும் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-ன் கட்டுப்ப்பாட்டிலேயே இருக்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு தெஹ்ரிக் தலிபான்களை ஒதுக்க அல்லது ஒழிக்க முடியுமோ அதை செய்ய வேண்டும் என்பதுதான் ஐ.எஸ்.ஐ. மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் வியூகம். கடந்த சில ஆண்டுகளாக முல்லா ஒமர் தலைமையிலான 'நல்ல' தலிபான்களை நோக்கி சாய்ந்து கொண்டிருக்கிறது பாகிஸ்தான்.
ஆப்கானிஸ்தானிலும் காஷ்மீரத்திலும் தான் விரும்பியதை செய்து முடிக்க முல்லா ஒமர் தலைமையிலான தலிபான்களை பயன்படுத்துவது என்பதுதான் பாகிஸ்தானின் வியூகம். நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் போது அங்கே தலிபான்கள் உதவியுடன் செல்வாக்கு செலுத்த முடியும் என்பது பாகிஸ்தானின் கணக்கு. அதேபோல் காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக தலிபான்களை இறக்கவும் திட்டமிடுகிறது பாகிஸ்தான் ராணுவம்.
ஆகையால் பாகிஸ்தானின் "நல்ல தலிபான்" என்ற சர்ட்டிபிகேட் பெற்றுள்ள முல்லா ஒமர் தலைமையிலான ஆப்கான் தலிபான்கள் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளனர். இதை இந்தியா நன்கு அறிந்துள்ளது..
இந்த தலிபான்களை எப்படி எதிர்கொள்வது என்பதும் இந்தியாவுக்கு தெரியும். அதேபோல் பாகிஸ்தானில் தெஹ்ரிக் இ தலிபான்களுக்கு எதிராக ஆப்கன் தலிபான்கள் மற்றும் லஷ்கர் இ தொய்பாவை பாகிஸ்தான் பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
இனி பாகிஸ்தானில் தெஹ்ரிக் இ தலிபான்களின் தாக்குதல் அதிகரிக்கவே செய்யும் என்கின்றனர் பாதுகாப்பு வல்லுநர்கள்... அமெரிக்காவை பாகிஸ்தான் ஆதரிப்பதுதான் தெஹ்ரிக் இ தலிபான்களின் கோபத்துக்கு காரணம்.. வாகா எல்லையில் தெஹ்ரிக் இ தலிபான்கள் தாக்குதல் நடத்தியிருப்பதும் கூட இந்தியாவுக்கான ஒரு எச்சரிக்கையே.. இந்தியாவும் பாகிஸ்தானும் நல்லுறவாக இருப்பதை தெஹ்ரிக் இ தலிபான்கள் விரும்பவில்லை.
இருப்பினும் தற்போது தெஹ்ரிக் இ தலிபான், பாகிஸ்தானையே குறி வைக்கும் என்கின்றன இந்திய உளவுத்துறை வட்டாரங்கள்.