ஜூலை 1-ஆம் தேதி முதல், நாடு முழுக்க ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமல்!
ஜி.எஸ்.டி வரி சட்டத்தை அமல்படுத்த நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுமே ஒப்புக்கொண்டுவிட்டதாக மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் மகிழ்ச்சி தெரிவித்தார்.
டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி சட்டமான ஜி.எஸ்.டி ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதிலும் அமலுக்கு வர உள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இத்தகவலை தெரிவித்தார், மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ். நுகர்வு வரிகள் பலவற்றையும் நீக்கிவிட்டு ஒரே வரியாக ஜி.எஸ்.டி அமலில் இருக்கும் என்றும், இது ஒரு கேம் சேஞ்சர் என்றும் அவர் வர்ணித்தார்.
ஜி.எஸ்.டி வரி சட்டத்தை அமல்படுத்த நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுமே ஒப்புக்கொண்டுவிட்டதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
லண்டனில் இருந்து, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ஜி.எஸ்.டி சட்டம் தொடர்பாக பல்வேறு இடர்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 15ம் தேதிக்குள் அனைத்து திரைகளும் விலகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசனத்தில் திருத்தம் தேவைப்பட்டது என்றும், அது செய்து முடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தலைமை பொருளாதார ஆலோசகர், அரவிந்த் சுப்பிரமணியன் கடந்த வாரம் கூறுகையில், ஜி.எஸ்.டி சட்டத்தை தொடர்ந்து உள்நாட்டு வணிகம் அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும், இச்சட்டம் ஒரு வரம் என்றும் தெரிவித்திருந்தார்.