உலகின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் பிரதமர் மோடி: கூகுளுக்கு கோர்ட் நோட்டீஸ்
அலகாபாத்: கூகுளில் உலகின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலை தேடுகையில் அதில் பிரதமர் மோடியின் புகைப்படம் வந்தது தொடர்பாக அலகாபாத் நீதிமன்றம் கூகுளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்த வழக்கறிஞர் சுஷில் குமார் மிஸ்ரா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது,
2015ம் ஆண்டு கூகுளில் உலகின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலை தேடியபோது பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வந்தது. இதையடுத்து மோடியின் புகைப்படத்தை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியும் பயனில்லை.
எனவே, மோடியின் புகைப்படத்தை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்த கூகுள் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக கூகுள் நிறுவனம், அதன் சிஇஓ மற்றும் அந்நிறுவனத்தின் இந்தியா பிரிவு தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும் கூகுள் நிறுவன உயர் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக சுஷில் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் முன்பு இது தொடர்பாக அளித்த மனு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இது சிவில் வழக்கு என்று கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பிறகே இதை எதிர்த்து சுஷில் அலகாபாத் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார்.