கூகுள் செய்தா நான் யார்னு தெரியும்: போலீஸை அதிர வைத்த சைக்கோ கொலையாளி
பாட்னா: தன்னை பற்றிய விபரங்களை கூகுளில் தேடுமாறு கொலையாளி ஒருவர் போலீசாரிடம் தெரிவித்து அவர்களை அதிர வைத்துள்ளார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அவினாஷ் ஸ்ரீவஸ்தவா(33) என்கிற அமித். அவரது தந்தை லல்லன் ஸ்ரீவஸ்தவ் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி எம்.எல்.சி.யாக இருந்தவர். லல்லன் கடந்த 2003ம் ஆண்டு பாட்னாவில் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு அவினாஷின் வாழ்க்கை மாறிவிட்டது.
கொலை
தனது தந்தையை கொன்ற பப்பு கான் என்பவரை அவினாஷ் சுட்டுக் கொன்றார். பப்புவின் உடலில் இருந்து 32 தோட்டாக்கள் எடுக்கப்பட்டன. அவினாஷ் இதுவரை 22 பேரை கொலை செய்துள்ளார். அதில் 4 பேர் அவரது தந்தையின் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள்.
சட்டம்
லல்லன் கொலை வழக்கில் சட்டம் தனது கடமையை செய்ய தவறியதால் பழிவாங்க கொலை செய்யத் துவங்கியுள்ளார் அவினாஷ். கேங்ஸ் ஆப் வாசிபூர் 2 படத்தில் ஒருவர் தனது தந்தையை கொலை செய்தவனை பல முறை சுட்டு பழிவாங்கியது போன்றே அவினாஷும் செய்துள்ளார்.
கைது
வைஷாலி மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் கதவை உடைத்து பணத்தை திருட முயன்றபோது அவினாஷை போலீசார் கைது செய்தனர். நீ யார் என்று கேட்டதற்கு விசாரணை செய்து நேரத்தை வீணாக்க வேண்டாம் சைக்கோ கொலையாளி அமித் என்று கூகுளில் தேடினால் விபரம் கிடைக்கும் என்று அவினாஷ் தெரிவித்துள்ளார். இதை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பட்டதாரி
அவினாஷ் டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ. படித்தவர். படித்து முடித்த பிறகு பெரிய ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து கை நிறைய சம்பாதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.