குர்காவ்னில் சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை
டெல்லி அருகு உள்ள குர்காவ்னில் இருக்கும் சுங்கச்சாவடிக்கு கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணி அளவில் பைக்கில் வந்த இருவர் கமர்ஷியல் வாகனங்களுக்கு வரி வசூலித்துக் கொண்டிருந்த ஊழியர்களை தாக்கிவிட்டுச் சென்றனர். இந்த சம்பவம் நடந்த 30 நிமிடங்கள் கழித்து பைக் மற்றும் கருப்பு நிற ஸ்கார்பியோவில் 12 பேர் அங்கு வந்தனர்.
ஸ்காரிபியோவில் சைரன் இருந்ததுடன் அரசியல்வாதி ஒருவரின் போஸ்டரும் ஒட்டப்பட்டிருந்தது. அவர்கள் சுங்கச்சாவடியில் இருந்த ஊழியர்களை அடித்துவிட்டு அந்த இடத்தை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து ரூ.1.85 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து அங்கிருந்த ஊழியர் ரவி கூறுகையில்,
அவர்கள் இங்கு வெகுநேரம் இருந்தனர். நாங்கள் போலீசாருக்கு உடனே தகவல் கொடுத்தும் அவர் காலதாமதமாக வந்தனர். அவர்கள் பெல்ட்டுகள், ஹாக்கி ஸ்டிக்குள், செயின்கள், கட்டைகள் வைத்திருந்தனர் என்றார்.
இந்த சம்பவம் குறித்து குர்காவ்ன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.