பத்மநாபசுவாமி கோயில் வழக்கு விசாரணை: தலைமை நீதிபதி லோதா, வக்கீல் கோபால் சுப்பிரமணியம் திடீர் விலகல்
பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை அரசு ஏற்றுக் கொள்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சில வருடங்களுக்கு முன் இக்கோயிலில் 6 ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்களை கணக்கிட வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்களை கணக்கிட உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதற்காக 3 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பத்மநாபசுவாமி கோயில் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலான கோபால் சுப்பிரமணியம் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பத்மநாபசுவாமி கோயிலுக்கு வந்து ஆய்வு நடத்தி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில் கோயில் சொத்துக்களை மன்னர் குடும்பத்தினர் உள்பட பலர் கடத்திச் சென்றுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். கோயில் சொத்துக்கள் மேலும் பறிபோகாமல் இருப்பதற்காக, கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திடம் இருந்து பறித்து திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் புதிய கமிட்டி அமைக்க வேண்டும் எனவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதன்படி, புதிய நிர்வாக கமிட்டியை உச்ச நீதிமன்றம் நியமித்தது. பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள ரகசிய அறைகளின் முழு கட்டுப்பாடும் இந்த புதிய கமிட்டியின் கீழ்தான் தற்போது உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் அடங்கிய பட்டியலை தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான குழு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. அந்த பட்டியலில் கோபால் சுப்பிரமணியத்தின் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால், மத்திய அரசு கோபால் சுப்பிரமணியத்தை புதிய நீதிபதியாக நியமிக்க மறுத்து அந்த பட்டியலை திருப்பி அனுப்பியது. இது குறித்து கோபால் சுப்பிரமணியம் கூறுகையில், புதிய நீதிபதிகள் பட்டியலை மத்திய அரசு திருப்பி அனுப்பியதன் மூலம் உச்ச நீதிமன்றத்தை அவமதித்துள்ளது. இந்த விவகாரத்தை தலைமை நீதிபதி முறையாக கையாளவில்லை. எனவே, தலைமை நீதிபதியாக ஆர்.எம். லோதா இருக்கும் வரை உச்ச நீதிமன்றத்திற்கு வரமாட்டேன்' என்று கூறினார்.
இதற்கிடையே பத்மநாபசுவாமி கோயில் விவகாரம் தொடர்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில், நேற்று காலை இந்த வழக்கு விசாரணையில் இருந்து தான் விலகிக் கொள்வதாக தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா அறிவித்தார். இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற சிறப்பு வழக்கறிஞரான கோபால் சுப்பிரமணியமும் இந்த வழக்கில் இருந்து தான் விலகிக் கொள்வதாக அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் டி.எஸ். தாக்கூர் மற்றும் அனில் ஆர். தாவே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.