ஆக்சிஜன் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் பலி.. உபி அரசுக்கு அலகாபாத் ஹைகோர்ட் நோட்டீஸ்
ஆக்சிஜன் பற்றாக்குறையால் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானது தொடர்பாக உத்தரபிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அலகாபாத்: உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து பலியானது தொடர்பாக அம்மாநில அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம், கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உபி முதல்வர் இதனை மறுத்தார். மாநில அரசின் இந்தச் செயல்பாட்டுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இந்த வழக்கைத் தானாக முன்வந்து உச்சநீதிமன்றம் ஏற்க வேண்டும் என்று கோரி பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியது. இந்நிலையில், குழந்தைகள் இறப்பு தொடர்பாக பொது நல மனு ஒன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற அலகாபாத் உயர்நீதிமன்றம் 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உபி அரசுக்கு உத்தரவிட்டுளளது.