ஏமனில் இருந்து 11 இந்தியர்களை மீட்ட பாக்.... அவர்களது விமானத்தில் அழைத்து வர இந்தியா அனுமதி
டெல்லி: உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் இருந்து மீட்கப்பட்ட 11 இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் இந்தியா அனுப்பி வைக்கிறோம் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது.
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் வசித்து வந்த 4 ஆயிரம் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆபரேஷன் ராஹத் என்ற இந்த மீட்பு பணி வெற்றிகரமாக நடந்துள்ளது. இதை பார்த்துவிட்டு தங்கள் நாட்டு மக்களையும் மீட்டுத் தருமாறு அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 26 நாடுகள் இந்தியாவிடம் உதவி கேட்டுள்ளது.
இந்நிலையில் ஏமனில் வசித்து வந்த பாகிஸ்தானியர்களை மீட்க அந்நாட்டு கடற்படையைச் சேர்ந்த கப்பல் ஏமனில் உள்ள முகல்லா துறைமுகத்திற்கு சென்றது. அந்த கப்பலில் பாகிஸ்தானியர்கள் தவிர 11 இந்தியர்களும் மீட்கப்பட்டனர். அவர்கள் செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரை அடைந்துள்ளனர்.
India has accepted Prime Minister Nawaz Sharif's offer of a special plane to fly 11 Indian nationals to India with gratitude.
— Abdul Basit (@abdulbasitpk1) April 7, 2015
கராச்சி வந்துள்ள இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் இந்தியா அனுப்பி வைக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளார். அவரின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரி அப்துல் பாசித் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
11 இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் இந்தியா அனுப்பி வைக்கிறோம் என்ற பிரதமர் நவாஸ் ஷரீபின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.