பணியில் மரணமடைந்த ராணுவ வீரர் குழந்தைகள் கல்வி கட்டணம் முழுவதையும் அரசே செலுத்தும்: மத்திய அரசு
டெல்லி: பணியின்போது மரணமடைந்த, மாயமான, மாற்றுத்திறனாளிகளான, ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி தொகைக்கான ரூ.10,000 என்ற உச்சவரம்பை நீக்கியுள்ள மத்திய அரசு, கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்த முன் வந்துள்ளது.
நிதித்துறை அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய ராணுவ வீரர்கள் பணியின்போது கொல்லப்பட்டாலோ, மாற்றுத்திறனாளியானாலோ, காணாமல் போய்விட்டாலோ அவர்கள் குழந்தைகளுக்கு கல்வி கட்டணமாக மாதத்திற்கு அதிகபட்சம் ரூ.10,000 வழங்கப்பட்டு வந்தது.
இந்த சலுகை தொடரும். ஆனால், ரூ.10,000 என்ற உச்சவரம்பு மட்டும் நீக்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலுவோருக்குதான் பொருந்தும். மிலிட்டரி பள்ளிகள், மத்திய அல்லது மாநில அரசுகள் அங்கீகரித்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றுக்கும், முழுக்க மத்திய அல்லது மாநில அரசுகளின் நிதி உதவியோடு செயல்படும், தன்னாட்சி (autonomous) கல்வி நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு, இதுபோன்ற மாணவ, மாணவிகளுக்கு டியூசன் ஃபீஸ், ஹாஸ்டல் கட்டணம், புத்தக கட்டணம், சீருடை கட்டணம் மற்றும் ஆடைகளுக்கான செலவு அனைத்தும் அரசால் செலுத்தப்பட்டு வந்தது.
ஆனால், 7வது நிதி கமிஷன் அளித்த பரிந்துரையை ஏற்று, செலவீனங்களுக்கான உச்சவரம்பு ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய கடற்படை தலைமை அட்மிரல் அனில் லன்பா மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி, பழைய நடைமுறையை அமல்படுத்த கோரிக்கைவிடுத்தார். இந்த நிலையில், நிதி அமைச்சகம் உத்தரவை பிறப்பித்துள்ளது.