ரெஸ்டாரண்டுகளில் உணவு அளவை குறைக்க மத்திய அரசு முடிவு! ஏன் தெரியுமா?
டெல்லி: ஹோட்டல்களில் வழங்கப்படும் சாப்பாட்டின் அளவை நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். எனவே அரசு கூறும் வழிகாட்டு நெறிமுறைப்படிதான் இனிமேல் ஹோட்டலில் சாப்பாடு வழங்கப்படும்.
உணவு வீணாதல் ஒரு பெரும் சமூக கொடுமை என மன்கிபாத் வானொலி உரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி பேசிய நிலையில், அரசு உடனடியாக அதை தடுக்க தேவையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாம்.
இதுபற்றி நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதை தெளிவுபடுத்தியுள்ளார்.
"ஒருவர் 2 இரால்தான் சாப்பிட முடிகிறது என்றால், அவருக்கு ஒரு பிளேட்டில் 6 இரால் வைப்பது தேவையற்றது. 2 இட்லிதான் சாப்பிடும் ஒருவருக்கு 4 இட்லி வைப்பதற்கான தேவையில்லை. சாப்பிட முடியாத பண்டம் வீணாக குப்பைக்கு போகிறது. மேலும், சாப்பிடாத பொருளுக்கும் சேர்த்து கஸ்மர்கள் பணம் செலுத்த வேண்டியுள்ளது" என்கிறார் ராம்விலாஸ் பாஸ்வான்.
நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் ஒரு கேள்வி பட்டியலை தயாரித்து வருகிறதாம். இந்த பட்டியல் ரெஸ்டாரண்ட் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதில், ஒரு வாடிக்கையாளர் எவ்வளவு சாப்பாட்டை சாப்பிட முடியும் என்பது போன்ற கேள்விகள் இருக்கும். இதற்கு கிடைக்கும் பதிலை வைத்து சராசரி உணவு அளவு நிர்ணயிக்கப்படுமாம். அதேநேரம், சாதாரண ஓட்டல்களில் கட்டுப்பாடு இல்லை என்கிறது அரசு.