நாளந்தா பல்கலைக்கழக வேந்தராக தாம் தொடர்வதை மோடி அரசு விரும்பவில்லை: அமர்த்தியா சென்
டெல்லி: புதுப்பிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாளந்தா பல்கலைக் கழகத்தின் வேந்தராக தாம் தொடர்வதை மத்திய மோடி அரசு விரும்பவில்லை என்று நோபல் பரிசு பெற்ற பொருளியல் மேதை அமர்த்யா சென் குற்றம்சாட்டியுள்ளார்.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தராக பணியாற்றி வருகிறார்.
அவரது பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகிறது. அப்பதவியில் அமர்த்தியா சென் மீண்டும் தொடர மத்திய அரசு விரும்பவில்லை என்ற பரபரப்பு குற்றச்சாட்டை அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமர்த்தியா சென், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினேன். ஆனால் அத்துறையிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
ஆகையால் நானே வேந்தர் பொறுப்பிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளேன் என்றார்.
ஆனால் நாளந்தா பல்கலைக்கழக போர்டு, அமர்த்தியா சென்னே வேந்தராக நீடிக்க கடந்த ஜனவரி மாதமே பரிந்துரை செய்துள்ள போதிலும், மத்திய அரசு அதற்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
இதனால் ஜனாதிபதியால் கூட இதில் தலையிட முடியாது. பிரதமர் மோடி பிரதமராக வருவதை ஏற்க முடியாது என்று 2013ஆம் ஆண்டு கருத்து தெரிவித்தவர் அமர்த்தியா சென் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவரான அமர்த்தியா சென்னை மத்திய அரசு ஓரங்கட்டுவது பல தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.