ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் திருத்தம் நிறைவேற்றம்-மத்திய அரசு அதிர்ச்சி!
டெல்லி: ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் அதிரடியாக திருத்தத்தைக் கொண்டு வந்து வெற்றிகரமாக நிறைவேற்றியதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்த புதிய வியூகம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டின் நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் என்பதால் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். பின்னர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற இரு சபைகளிலும் விவாதம் நடைபெற்றது.
அதே நேரத்தில் ஜனாதிபதியின் உரையில், கருப்பு பணத்தை மீட்கவும், மேல்மட்ட ஊழலை தடுக்கவும் மத்திய அரசு தவறியது பற்றி எதுவும் கூறப்படவில்லை என எதிர்க்கட்சிகள் அதிருப்தி வெளியிட்டிருந்தன.
இதனால் இதுதொடர்பாக ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. ஆனால் அங்கு மத்திய அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் அத் திருத்தத்தை கொண்டுவரவிடாமல் தடுக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது.
இந்நிலையில் ராஜ்யசபாவில் நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து பேசினார். பிரதமரின் பதிலுரையின் போது சரத்யாதவ், மாயாவதி போன்றவர்கள் இடைமறித்தனர். அவர்கள் பேசுவதற்கு நரேந்திர மோடி வழிவிட்டார்.
அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் எம்.பி. சீத்தாராம் யெச்சூரி பேச முயற்சித்த போது பிரதமர் அதனை ஏற்கவில்லை. அத்துடன் பிரதமர் மோடி உரையாற்றி முடித்த பின்னர் சபையை விட்டு வெளியேறியும் விட்டார்.
பிரதமர் பேசி முடித்ததும் பொதுவாக ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை திருத்தம் ஏதும் இல்லாமல் ஒருமனதாக நிறைவேற்றுவது வழக்கம்.
ஆனால் நேற்று பிரதமர் பேசி முடித்ததும் சபையைவிட்டு வெளியேறியதில் அதிருப்தி அடைந்த மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி மற்றும் சி.பி.எம். எம்.பி. பி.ராஜீவி ஆகியோர் ஜனாதிபதி உரையில் மேல்மட்ட ஊழலை தடுக்கவும், கருப்பு பணத்தை மீட்கவும் மத்திய அரசு தவறியது பற்றி குறிப்பிடப்படவில்லை‘ என்பதை தீர்மானத்தில் திருத்தமாக சேர்க்க வலியுறுத்தினர்.
இருப்பினும் இந்த திருத்தத்தை திரும்பப் பெறுமாறு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, எதிர்க்கட்சி எம்.பி.க்களைக் கேட்டுக்கொண்டார்.
இதற்கு சீதாராம் யெச்சூரி பதிலளிக்கையில், பொதுவாக இதுபோன்ற வேண்டுகோளை நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால், 14 மணி நேரம் விவாதம் நடைபெற்ற பிறகும், பிரதமரின் பதிலுரைக்கு விளக்கம் கேட்க எங்களை அனுமதிக்கவில்லை.
பிரதமரும் தனது பதிலுரையை முடித்தவுடன் சபையை விட்டு வெளியேறி விட்டார். எனவே, திருத்தம் கொண்டு வருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று அதிரடி காட்டினார்.